2025 ஜூன் 25, புதன்கிழமை

உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்கும்வரை இ.தொ.கா.பின்வாங்காது

Kogilavani   / 2015 ஜூலை 19 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்கும்வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாயை கொடுக்க மறுக்கும் கம்பனிகளுக்கு எதிராக போராடாமல், தோட்ட தொழிற்சங்கங்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மீது குற்றம்சாட்டுவது தொழிற்சங்கங்களின் கையாளாகாத தனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அணுகுமுறை பிழையானது என சில அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு கூறுபவர்கள், கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கூட்டொப்பந்தத்தின் பின்பு, ஏதாவது அணுகுமுறைகளை கூறி தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுகொடுத்திருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை. அவ்வாறு செய்யாது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அணுகுமுறைகள் பிழையானது என இவர்கள் எவ்வாறு கூறமுடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

'தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகவே பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தாது, முதலாளிமார் சார்பாக செயற்படுவதும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு  சார்பாக பேசுவதும் முதலாளிமார்களுக்கும் இவர்களுக்குமான நெருங்கிய உறவை காட்டுகிறது ' என்றும் அவர் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு இ.தொ.கா.பணித்தது. ஆனால், சில தொழிற்சங்கங்கள் மக்களை பிழையாக வழிநடத்தி அவர்களை மீண்டும் பணிக்குச் செல்வதற்கு பணித்துள்ளன. இது இவர்கள், முதலாளிமார்களுக்கு சார்பாகவே செயற்படுவதை எடுத்துக்காட்டுகின்றது.

'தேர்தல் காலத்தை தமக்கு சாதமாக பயன்படுத்திகொண்ட முதலாளிமார் சம்மேளனமானது இவ்வாறான தொழிற்சங்க பிரதிநிதிகளை கைகளில்போட்டு கொண்டு, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளத்தை வழங்குவதற்கு பின்வாங்குகின்றன. தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி என இவர்கள் தமது கருத்துக்களை திணித்து வருகின்றனர். இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஒருகாலமும் இடம்கொடுக்கமாட்டார்.

'பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளத்தை பெற்றுகொடுக்காது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் எந்த ஒப்பந்தத்திலும் ஒருபோதும் கையொப்பமிடார்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .