2026 மே 02, சனிக்கிழமை

இராகலை நகருக்கு கரும்புள்ளியாகும் குறைபாடுகள்

ஆ.ரமேஸ்   / 2019 மார்ச் 20 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை தேர்தல் தொகுதிக்கும் வலப்பனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்கும் உட்பட்ட ஹல்கரனோயா என்றழைக்கப்படும் இராகலை நகரம், நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நகரங்களில் ஒன்றாகும். 

இப்பிரதேசப் பெருந்தோட்டப் பகுதிகள், கிராமங்கள், ஏனைய நகரங்களில் வாழும் மக்களின் அனைத்துச் சேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய மத்திய நகரமாகவே, இந்நகரம் காணப்படுகின்றது. 

இந்நகரில் அமைந்துள்ள இந்துக் கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரமாதா (ஹோலிரோசரி) தேவாலயம், விகாரை, முஸ்லிம் பள்ளிவாசல் என்பன, ஒன்றையொன்று பார்க்கும் முகமாக அமைந்துள்ளமையானது, இந்நகரை அழகுபடுத்துவதாக அமைந்துள்ளது.  

இந்தப் பிரதான மத்திய நகரின் மேற்பகுதி, கீழ்பகுதியென இரண்டு பகுதிகளிலும், கடைத்தொகுதிகளும் நகரவாசிகளின் குடியிருப்புகளும் காணப்படுகின்றன. அத்துடன், பிரதான பாடசாலைகள் இரண்டும் வங்கிகளும், அரசாங்கத் திணைக்களங்களும் காணப்படுகின்றன. சகல வசதிகளும் கொண்டுள்ள இந்த நகரைச் சுற்றிலும் அரை கிலோமீற்றர் தொலைவில், தோட்டப் பகுதிகளே அதிகமாகக் காணப்படுகின்றது .  சூரியகாந்தி, நடுக்கணக்கு, சென்லெனாட்ஸ், இராகலை தோட்டம், ஸ்டபோட் எனப் பல தோட்டப்பகுதிகளும், இராகலை நகருக்கு அருகிலேயே காணப்படுகின்றன. அங்கு வாழும் மக்கள், இராகலை நகரைப் பிரதான நகரமாகவே பாவிக்கின்றனர். 

ஒரு காலத்தில், அடிப்படை வசதிகள், அபிவிருத்திகள் அற்ற நகரமாகக் காணப்பட்ட இந்நகரம், தற்போது பாரிய அபிவிருத்தி அடைந்துவரும் நகராக மாற்றம் பெற்று வருகின்றது. மாடிக் கட்டடங்களுடன், அரசாங்கத் திணைக்களங்களையும் கொண்டு, அழகுமயப்பட்ட நகரங்களில் ஒன்றாகவும், இந்நகரம் காணப்படுகின்றது. 

இவ்வாறிருக்கையில், இந்த நகரின் அழகு, சுற்றாடலைக் கெடுக்கும் வகையில், பல்வேறு அம்சங்கள் காணப்படுவதோடு, அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

கழிவு நீரோடும் காண்களின் சுத்திகரிப்பின்மை, சுகாதாரச் சீர்கேடுகளை ஊருவாக்கும் பிரச்சினைகள், முறையற்ற வகையில் அமைக்கப்படும் மீன் வியாபார நிலையங்கள், குப்பைகள் அகற்றாமை போன்ற பல விடயங்கள், இந்த நகரின் அழகுக்கு, ஒரு கரும்புள்ளியாக அமைந்துள்ளன.  இந்த நிலைமை, கடந்த 8 மாதங்களாகத் தொடர்கின்றன. உட்கட்டமைப்பு வசதிகளிலும் சுகாதாரம் சார்ந்த விடயங்களை முறையாகக் கவனிக்காமையும்மே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.  

இது குறித்து, வலப்பனை பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ள போதிலும், குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியேனும் இவ்விடயங்கள் குறித்து, வலப்பனை பிரதேச சபைத் தவிசாளர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .