2026 மே 09, சனிக்கிழமை

dd

’இராகலை நகரை சுத்திகரிக்க இருவரே உள்ளனர்’

ஆ.ரமேஸ்   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பிரதேச சபைக்கு, அதிக வரி வருமானத்தை ஈட்டிதரும் இராகலை நகரத்தின் சுத்திகரிப்புப் பணிகளுக்கானத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக, புதிய  ஜனநாயக மாக்ஸிச லெணினிச கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வைத்தியலிங்கம் மகேந்திரன் தெரிவித்துள்ளதாவது,

இராகலை நகரின் சுத்திகரிப்புப் பணிகளில், தினமும் 19 தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வந்த நிலையில், தற்போது இவர்களில் இரண்டு தொழிலாளர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.

அந்த வகையில் வலப்பனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராகலை நகருக்கான சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக அவர் கூறினார்.

அதேநேரத்தில், வலப்பனை பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படும் இராகலை நகரத்தின் சுத்தகரிப்பில், பிரதேச சபை அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய நிலையிலேயே, இந்தப் பற்றாக்குறை நிலவி வருவதாக அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்த்ததில், இராகலை நகரத்துக்கு, வலப்பனை பிரதேச சபையால், நியமிக்கப்பட்டிருந்த சுத்தகரிப்புத் தொழிலாளர்கள் பலருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கவில்லை என்றும் அத்தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை, பிரதேச சபை முறையாக கவனம் செலுத்தத் தவறியுள்ளமை தெரியவந்தள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், மிக நீண்ட காலமாக தற்காலிகத் தொழிலாளர்களாக நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களை வழிநடத்தி வந்துள்ளமையால், வாழ்வாதார ரீதியில் பாரிய பின்னடைவை, இந்தத் தொழிலாளர்கள் எதிர் கொண்டுள்ளார் என்றும் இதனாலேயே, இந்தத் தொழிலை விடுத்து, வேறு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் இராகலை நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய மஹா கும்பாபிஷேக விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், நகரின் சுத்தத்தைப் பேணவேண்டிய பாரிய கடப்பாடு, வலப்பனை பிரதேச சபைக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இது குறித்து வலப்பனை பிரதேச சபையின் தவிசாளரின் கவனத்துக்கு, இராகலையில் இயங்கும் புதிய ஜனநாயக மாக்ஸிச லெணினிச கட்சி கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .