2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ஊவாவில் சீரற்ற வானிலை நீடிப்பு; பதுளை, மொனராகலைக்குப் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஊவா மாகாணத்தின், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நீடித்துவரும் சீரற்ற வானிலையால் பாதிப்புகள் தொடர்கின்றன.

பதுளை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, 362 குடும்பங்களைச் சேர்ந்த 2,440 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் 302 வீடுகள் பகுதியளவிலும் 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால், பதுளை மாவட்டத்தில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூவர் உட்பட ஐவர் காயங்களுக்குள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தம்பேதன்னை தமிழ் வித்தியாலயம், பிட்டரத்மலை தமிழ் வித்தியாலயம், நியூபேக் தமிழ் வித்தியாலயம், கனவரல்லை கலாசார மண்டபம், சர்வோதய, சமூக மத்திய நிலையங்கள் மூன்று, பண்டாரவளை இளைஞர் செயலகக் கேட்போர் கூடம், தெல்தெனிய கனிஷ்ட வித்தியாலயம், உல்ஹிட்டிய சமூகநிலையம், பதலயாய பிரஜா நிலையம், அயிஸ்லெப்பை தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், மொரகொல்ல தமிழ் விதுளை-முதியங்கனை யாத்திரிகர்கள் தங்கும் விடுதி, மாகந்தை தேயிலைத் தொழிற்சாலை, வார்வீக் தோட்ட தொழிற்சாலை ஆகிய 17 நலன்புரி நிலையங்களில், 2,440 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்தார்.

அவர்களுக்கான நிவாரண உதவிகள், உலருணவுப் பொருள்கள், பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகமையின் உத்தரவின் பேரில், பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் மூலம் கிரமமாக வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் பதுளை மாவட்டத்தின் லுணுகலை, பசறை, நமுனுகலை, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஊவா –பரணகமை ஆகிய பகுதி பிரதான பாதைகளில் மண்சரிவுகள், மரங்கள் முறிந்து விழல், கற்பாறை சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் இதனால் வாகன போக்குவரத்துகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பெரும்பாலான பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதால், மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்தும்படி வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தின் இடர் முகாமைத்துவப் பணிப்பாளர் ரவீந்திர குமாரவிடம் தொடர்புகொண்டு வினவுகையில், 'சீரற்ற வானியால், மொனராகலை மாவட்டத்தில், அறுநூறு குடும்பங்களைச் சேர்ந்த 3,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 400 வீடுகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளன என்றும், 92 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியிலேயே, கூடுதலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இங்கு, 432 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். தனமல்விலவில் 52 குடும்பங்களும் மொனராகலையில் 40 குடும்பங்களும் சியாம்பலாண்டுவையில் 22 குடும்பங்களும் படல்கும்பறையில் 12 குடும்பங்களும் என்ற வகையில் 600 குடும்பங்களைச் சேர்ந்த 3,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் மெதகமையில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் சேனாபதி மகா வித்தியாலயத்திலும், மொனராகலை தொழில்நுட்பக் கல்லூரியில் 22 குடும்பங்களும், பிபிலையில் 69 குடும்பங்களும், ரோஸ்பேரி தோட்டத்தின் தமிழ் வித்தியாலயத்தின் படல்கும்பரை சமூக நிலையத்தில் ஒன்பது குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

சீரற்ற வானிலையால், ஒரு மரணம் சம்பவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலருணவுப் பொருள்களும் நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .