2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடன் கலாசாரத்துக்கு சாவுமணி அடிக்க வேண்டும்

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஷ்பராஜா

தொடர்ந்து கடன் கலாசாரத்திலே வாழ்ந்து வரும் மலையக மக்கள், அதிலிருந்து மீள வேண்டுமென பிரடோ நிறுவனம் கேட்டுகொண்டுள்ளது.

'மலையக மக்களை தொடர்ந்து கடன்காரர்களாக வைத்திருபதற்கே அனைவரும் முயற்சிக்கின்றனர்.  தீபாவளியை கொண்டாடுவதற்கு கடன், மரண சடங்குகளுக்கு கடன், திருமணக்கடன், இப்போது வீடுகளுக்கு பொருள் வாங்கக் கடன் என எல்லாவற்றிலுமே கடன் கலாசாரத்தையே காண்கிறோம்.
 
தீபாவளி முற்பணம் கிடைத்தால்தான் தீபாவளி என்ற பாரம்பரியத்தை மக்கள் தொடர்ந்து வருகின்றனர். இம்முறை தீபாவளி முற்பணம் என்பது கடைசிவரை முழுமையாக தீர்க்கப்படாத விடயமாக இருந்தது" என பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.  

இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'நமது மக்களின் கடன் கலாசாரம் என்னும் பலவீனத்தை நன்கு அறிந்துகொண்டிருக்கும் கம்பனிக்காரர்கள், இலத்திரனியல் பொருட்களை வீட்டு வாசல்களுக்கே கொண்டு வந்து கடன் அடிப்படையில் மக்கள் தலையில் கட்டும் வியாபாரத்தை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

பற்றாக்குறைக்கு முச்சக்கர வண்டி லீசிங் வியாபாரமும் தோட்டங்களில் மும்முரமாக நடந்து வருகிறது.   பெரும்பாலனோர்  கடன் கலாசாரத்தில் மூழ்கி  மாதாந்தம் உழைத்த தமது  சம்பள பணத்தை கையில் வாங்கு முன்னரே, இவ்வாறான கம்பனிகளுக்கும்   கடன் காரர்களுக்கும் வழங்குகின்றனர்.

மாதாந்த உழைப்பை கையில் வாங்கு முன்னரே கடன் கட்டுவது என்பது  உழைப்பை கேவலப்படுத்தும் விடயம் என்பது மக்களுக்கு புரியவில்லை. இதிலிருந்து மக்களை மீட்க எவரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.  

கடன் என்பது நமது கௌரவமான உழைப்பை, சில வேளைகளில் நமது வாழ்க்கையையே அடகு வைத்து அல்லது ஈடுவைத்து பெறப்படும் பணம் என்பதை மக்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும். கடந்த காலங்களில் பிரிடோ நிறுவனம் இந்த கருத்தை தொடர்ந்து சொல்லி  வந்திருக்கிறது.

இதன் பலனாக இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட சிலர், தீபாவளி முற்பணம் வாங்குவதற்கு பதிலாக வருட ஆரம்பத்திலேயே தோட்ட அதிகாரிகளிடம் தமது தீபாவளி  செலவுக்காக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அறவிட்டு, சேமித்து வைத்து தீபாவளிக் காலத்தில் தாம் சேகரித்தை பணத்தை பெற்றுக்கொண்டு தீபாவளி முற்பணம் என்ற கடனில்லாமல் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்கள்.  

தீபாவளி முற்பணம் என்ற கடனிலிருந்து மட்டுமல்ல பொதுவாக  எதற்காகவும் கடன் வாங்கும் கடன் கலாசாரத்திலிருந்து நமது மக்கள் விடுதலை பெறவேண்டும்.        

கடன் வாங்கி தீபாவளி கொண்டாடும் சாபக்கேடான வழக்கத்துக்கும் சாவுமணி அடிக்கவேண்டும். கடனின்றி வாழும் புதிய சகாப்தத்தை தொடங்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். சிக்கனமும்  திட்டமிடுதலும் இருந்தால் மட்டுமே இதனை சாதிக்க முடியும்.

இம்முறை மதுவற்ற தீபாவளி பரிந்துரையின்  போது முன்னெடுக்கப்பட்ட' கடன் கலாசாரத்தை ஒழிப்போம்' என்னும்  பிரசாரத்தை தொடர்;ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .