2026 மே 09, சனிக்கிழமை

’கடன் சலுகையை பெருந்தோட்ட மக்களும் பெறவேண்டும்’

டி. ஷங்கீதன்   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் வழங்கப்படும் கடன்களைப் பெற்று, வீடுகளை அமைத்துக்கொள்ளும் கிராமப் புற மக்களைப் போன்றே, இந்த அமைச்சால் வழங்கப்படும் கடன் சலுகைகளை, பெருந்தோட்ட மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட பகுதிகளில், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக, வீடுகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, நேற்று (27), நுவரெலியா மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர், பெருந்தோட்ட அமைப்புக்கு என, தனி அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வந்தது என்றும் இதன் காரணமாக, கடன் அடிப்படையில் அமைக்கப்பட்டு வந்த வீடுகளை மக்கள் பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்றும் கூறினார்.

ஆனால், தற்போது மீண்டும் அந்த வீடுகளை, பெருந்தோட்ட பகுதிகளில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் தன்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளை அமைப்பதற்கு விருப்பம் தெரிவிப்போருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மலையக மக்கள் முன்னணி செய்து கொடுக்கும் என்றும் இந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவிதமான கட்சி பேதங்கள் இன்றி, அனைத்து மக்களுக்கும் வீடுகள் கிடைக்க வழிசமைத்துக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

எனவே, இந்தத் திட்டத்தின் மூலமாக வீடுகளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள், தன்னுடைய காரியாலயத்தை தொடர்பு கொள்ளுமாறு, இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, தனது ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவருடைய அலைபேசி இலக்கமான 07763338223 என்ற இலக்கத்துக்கு, தொடர்பை ஏற்படுத்துமாறும், இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .