2026 மே 09, சனிக்கிழமை

dd

’கணிக்கா தோட்டப் பாலம் புனரமைக்கப்பட்டாலே வாக்கு’

ஆ.ரமேஸ்   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பிரதேசத்துக்குட்பட்ட இராகலை, மதுரட்ட பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கணிக்கா தோட்டத்திலுள்ள மக்கள், தினமும் பயன்படுத்தி வரும் பாலம் தாழிறங்கியுள்ளதாகவும் அதை விரைவில் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பாலம், ராகலை நகரிலிருந்து கணிக்கா தோட்டத்துக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் தாழிறங்கியுள்ளதால், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் எனவே, இதைப் புனரமைத்துத் தருமாறு, வலப்பனை பிரதேச சபை, நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகள், தொழிற்சங்கக் காரியாலய அதிகாரிகள் ஆகியோருக்கு, கடிதம் மூலம் அறிவித்துத்தும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 25 வருடங்களாக, கணிக்கா தோட்டம் குறித்து, எந்தவொரு அரசியல்வாதியும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் எனினும் தேர்தல் காலங்களில் மாத்திரம், வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெட்கமின்றி வந்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தங்களது கணிக்கா தோட்டம், அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வருடத்துக்கு முன்னர், இதே தோட்டத்திலுள்ள மற்றுமொரு உடைந்த பாலத்தில், மழை நேரத்தில் சென்றுகொண்டிருந்த மாணவியொருவர், வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்காகவோ மாகாண சபை தேர்தலுக்காகவோ வாக்குகளை கேட்க வரும் அரசியல்வாதிகள், இந்தப் பாலத்திலேளே பயணிக்க வேண்டிவரும் என்றும் அப்போதுதான், தங்களது நிலைமையை, அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ள மக்கள், ஆனால், இனிமேலும் அரசியல்வாதிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

தங்களது இந்தப் பாலமும், தோட்டத்துக்குள் உள்ள வீதிகளும், புனரமைத்துக் கொடுத்தால் மாத்திரமே, வாக்குகளை வழங்குவது குறித்து யோசிப்பதாகவும் இதன்போது மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .