2026 மே 09, சனிக்கிழமை

dd

கண்டி நகர ஓட்டோ சாரதிகளுக்குக் கட்டுப்பாடு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபட்டு வரும் ஓட்டோ சாரதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வுப் பெற்றுத்தருவதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே உறுதியளித்துள்ளார்.

அத்துடன் ஓட்டோ சாரதிகள், ஒழுக்கத்துடனான சிறந்த ஓட்டோ சேவையை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓட்டோ சாரதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதுத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று, மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமமேவின் தலைமையில், கண்டியில், நேற்று முன்தினம் நடைபெற்றது.

கண்டி மாவட்ட ஓட்டோ சங்கத்தின் உறுப்பினர்கள், கண்டி நகரசபையின் தலைவர்,  உபதலைவர், எதிர்கட்சித் தலைவர், மத்திய மாகாண சபையின் பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதன்போது, கண்டி நகரிலுள்ள ஓட்டோ சாரதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.  

கண்டி மாநகர சபை, ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் செவிமடுத்த ஆளுநர், இரு தரப்பினருக்கும் பாதிக்காத வகையில், பல தீர்மானங்களை அறிவித்தார்.

ஓட்டோ சாரதிகள் சமூகமானது, மிக முக்கியப் பணியை ஆற்றிவருவதாகவும் எனவே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டி நகரில், 169 ஓட்டோ தரிப்பிடங்கள் உள்ளன என்றும் இதுவரை 130 ஓட்டோ தரிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டிய அவர், ஓட்டோ தரிப்பிடங்கள் தொடர்பிலும்,  அவைத் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் தொடர்பிலும் ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு,  பணிப்புரை விடுத்தார்.

சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கும் குற்றங்களை மேற்கொள்ளவும் ஓட்டோக்களே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ஓட்டோ சாரதிகளுக்கும் சமூக பொறுப்புகள் உள்ளன என்றும் எனவே, சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு துணைப்போவததை, ஓட்டோ சாரதிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன் பயணிகளிடமிருந்து நியாயமற்றமுறையில் கட்டணங்கள் அறவிடுவதை, ஓட்டோ சாரதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொறிமுறை ஒன்று அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில், அதிகளவு சத்தத்துடன் பாடல்களை இசைத்தல், மற்றும் தேவையற்ற படங்கள், வரிகளை  ஓட்டோகளில் ஒட்டியுள்ள சாரதிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, ஓட்டோ ஓட்டுநர் உரிமக் கட்டணத்தை, சாரதிகள் முறையாக செலுத்துவதில்லை என்று, நகராட்சி  ஆணையாளர், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதையடுத்து, இரண்டு மாத காலத்துக்குள் அந்தக் கட்டணத்தை செலுத்துவதாக, ஓட்டோ சாரதிகள் சங்கம் இணக்கம் தெரிவித்தது.

எனினும் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கிய ஆளுநர் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பாக, கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .