2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

‘கொவிட்-19 பற்றி பேசுவதில் பயனில்லை’

எம். செல்வராஜா   / 2020 மே 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி அமைச்சு, திணைக்களம், ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு, திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துரையாடி பாடசாலைகளை எப்போது திறக்க வேண்டுமென்ற முடிவின் பிரகாரம் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் தொடர்ந்தும் கொவிட் -19 தொற்று குறித்து பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எய்ச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.

அரச பாடசாலைகளை மீண்டும் திறக்கும் வகையிலான மாவட்ட மட்டக் கூட்டம், பண்டாரவளைக் கல்வி வலய அலுவலக கேட்போர் கூடத்தில், இன்று (13) நடைபெற்றது.

கல்வி அமைச்சின் செயலாளர் என்.எய்ச்.எம். சித்ரானந்த தலைமையில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில், ஊவா மாகாண செயலாளர், ஊவா மாகாண கல்விச் செயலாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், பதுளை மாவட்ட வலயம் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர், கல்வி உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம், புலமைப் பரிசில் ஆகியவற்றின் மாணவ, மாணவிகளின் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்து வருவதாகவும் முதலில் உயர் வகுப்புக்களை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னோடியாக, இக்கல்விச் செயற்பாடுகள் இணையங்கள், டிஜிட்டல்கள் ஊடாகவும் மேலும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படல் வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் கூறினார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை, தரம் 6, 7களில் மாற்றுவதற்கும் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் அத்துடன், அடுத்தாண்டு புதிய மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும் விடயங்களும் அறிவுறுத்தல்களும் இணையம் ஊடாகவே வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

அதற்கமைய புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் கல்விசார் உத்தியோகத்தர்கள் கொவிட்-19 தாக்கத்துக்கான நிவாரண நன்கொடை வழங்குவது குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .