2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சிசு, கர்ப்பிணி மரணவீதம் அதிகரிப்பு: தகவல்கள் தவறானவை

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித்த ஆரியவங்ச

தியத்தலாவை வைத்தியசாலையில் சிசு, கர்ப்பிணிகளின் மரண வீதம் அதிகரித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என வைத்தியசாலை நிர்வாகம், ஊவா மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிசு மற்றும் தாய் மரண வீதம் அதிகரித்துள்ளதாக வெளிவந்த தகவல்களை ஆராயும் நோக்கில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத், புதன்கிழமை (23) அவ்வைத்தியசாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

சிறுவர் விடுதி, சத்திர சிகிச்சைக் கூடம், மகப்பேற்று விடுதி ஆகியவற்றை இதன்போது பார்வையிட்ட முதலமைச்சர், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மருத்துவ அதிகாரிகளிடமும்  ஏனைய உத்தியோகத்தர்களிடமும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, வைத்திசாலை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை எனவும் தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன எனவும் வைத்திய அதிகாரிகள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

இவ்வைத்தியசாலையில், 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 705 சிசுக்கள் பிறந்துள்ளன. அதில் 22 சிசுக்கள் நிறை குறைந்தவை. ஒரு சிசு மாத்திரமே உயிரிழந்துள்ளது. எனினும், ஊடகங்கள் 8 சிசுக்கள் உயிரிழந்துள்ளதாகத் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது, நோயாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், பதாதைகளை ஏந்தி வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்கு, அமைச்சர் தனது அதிருப்தியையும் வெளியிட்டார்.

ஆனால், தமது நிறுவனத்தில் பொருளாளராகப் பணியாற்றிய 72 வயதான ராதாகிருஷ்ணன், வைத்தியர்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்தமை குறித்து, தியத்தலாவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக  நோயாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனத்தின் செயலாளர் தமயந்தி ஜயசிங்க, அமைச்சரிடம் குறிப்பிட்டார்.

முறையான கவனிப்பு இன்மையால் கர்ப்பிணிகள் மூவரும் சிசுவொன்றும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .