Janu / 2026 மார்ச் 03 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை(03) அன்று வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, ஹட்டன் – ஏபோட்ஸிலி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் அன்றைய தினமே டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த பிரேத அறையில் பணியாற்றும் மூன்று சிற்றூழியர்கள் சடலத்திற்குப் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானதை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் வைத்தியசாலைக்கு முன்பாகத் திரண்டனர்.
"வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா", "குற்றவாளிகளைக் கைது செய்" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஆர்ப்பாட்ட இடத்திற்கு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தனர்.
சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த வைத்திய அதிகாரி டாக்டர் பஷ்லி,
"குறித்த சடலம் கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. சடலம் வைக்கப்பட்டிருந்த நிலை குறித்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனையடுத்து பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தோம். அதில் மூன்று சிற்றூழியர்கள் அநாவசியமான முறையில் பிரேத அறைக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக நாம் உள்வாரியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ். சதீஸ்


16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
26 minute ago
56 minute ago