2025 ஜூன் 21, சனிக்கிழமை

’தூய நீரே நோக்கம்’

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், புஸ்பராஜ்

சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம், நாட்டு மக்களுக்குத் தூய குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச புவித் தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, சிவனொளிபாதமலையைச் சுத்தப்படுத்தி, அதன் கழிவுகளை உத்தியோகபூர்வமாக மஸ்கெலியா பிரதேசசபையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, முதலமைச்சர் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற ​போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஊற்றெடுத்து ஓடும் தூய குடிநீர், எவ்வித மாசுமின்றி, அழுக்குகள் கலக்காது, தூயநீராக நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே, 'சூழல் புனிதமானது' என்ற நிகழ்ச்சித்திட்டம், ஐந்தாவது ஆண்டாகவும், நல்லதண்ணிப் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

"இதன் நோக்கம், இந்தப் புனித பூமியில் ஊற்றெடுக்கும் நீரூற்றுகளையும், இப்பகுதியில் வாழும் வன விலங்குகளையும், இப்பகுதியில் காணப்படும் இயற்கைச் சூழலையும் பாதுகாத்து, அதனை எதிர்கால சந்ததியினருக்குப் பெற்றுக்கொடுத்தலேயாகும்" என்று தெரிவித்தார்.

இப்பகுதியில் கழிவுகள் போடப்படுவதன் காரணமாக, பல்வேறு சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், அதனால் இயற்கை அழகு பாதிக்கப்படுவதுடன், பெறுமதிமிக்க உயிரினங்களும் செடி, கொடிகளும் அழிந்து போகின்றன எனவும் குறிப்பிட்டார்.

"சிவனொளிபாதமலையைத் தரிசிக்க, வீட்டிலிருந்து நாம் புறப்படும் போது, மிகவும் புனிதமாகவும் தூய்மையாகவுமே புறப்பட்டு வருகின்றோம். ஆனால் நாம் இங்கு வந்து நாம் கொண்டு வந்த கழிவுகளை, சுற்றுப்புறச் சூழலில் தூக்கி எறிவதால், பல விதமான பாவங்களுக்கு ஆளாகி வருகின்றோம்" என்று அவர் தெரிவித்தார்.

இச்சூழலில் போடப்பட்ட குப்பை கூளங்களை, பல்கலைக்கழக மாணவர்கள், அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் ஆகியோர் உதவி வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், "எனினும் இது தொடர்ந்தும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் இங்கு வரும் பொதுமக்கள் இதனை உணர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

"எமக்கு இருக்கும், அழகிய, மிகவும் பெருமதிமிக்க சொத்தான சிவனொளிபாதமலையைப் பாதுகாத்து, அடுத்துவரும் சந்ததியினருக்குப் பெற்றுக்கொடுப்பது, எமது அனைவரினதும் கடமையாகும். எனவே அதனை உணர்ந்து, சிவனொளிபாதமலையைத் தரிசிக்க வருபவர்கள், தாங்கள் கொண்டு வரும் கழிவுகளை இங்கு இடாது, அதனை மீண்டும் தங்களது வீடுகளுக்கே கொண்டு செல்லுமாறு, மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .