2025 ஜூன் 14, சனிக்கிழமை

”தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் திட்டங்கள் வேண்டும்”

Simrith   / 2025 ஜூன் 09 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக 'இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் ( CEWET) கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு என க.பொ.த ( உ/த) மற்றும் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கு ஒரு தொகை உதவிப் பணம் புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு மேலதிகமாக அவ்வாறு உதவி பெறும் மாணவர்களுள் சிறந்த பெறுபேறு பெறும் சில எண்ணிக்கையினருக்காவது இந்தியாவுக்கு சென்று பட்டப்படிப்பு, பட்டப்படிப்பின் படிப்புகளைத் தொடரும் வகையில் புலமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யாவுக்கும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜா ஆகியோரிடையே கண்டியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே  மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கூறுகையில்,

இலங்கை தோட்டத் தொழிலாளர் நம்பிக்கை நிதியத்தில் உயர்தரம், பல்கலைக் கழக கற்கை காலத்தில் உதவி பெற்றவன் என்பதை நன்றியோடு நினைவு கூருகின்றேன்.

இவ்வாறு வழங்கப்படும்  தொகை நாங்கள் பெற்ற காலத்துடன் ஒப்பிடும் போது  சிறிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அந்தத் திட்டம் எவ்வித மதிப்பாய்வுக்கும் அபிவிருத்திக்கும் உட்படவில்லை.  80 ஆண்டுகளை நெருங்கும் இந்த ' 'இலங்கைத்  தோட்டத் தொழிலாளர் நம்பிக்கை நிதியத் ' திட்டத்தில் ( CEWET) பயன்பெற்றோர் இப்போது எந்த நிலையை அடைந்துள்ளனர் என மதிப்பாய்வு செய்தல் வேண்டும். அது இத்திட்டம்  மலையகக் கல்வி வளர்ச்சிக்கு வழங்கியுள்ள பங்களிப்பை எடுத்துக் காட்டுவதோடு

சமகாலத்தில் புலமைப் பரிசில் பெறும் மாணவர்களுக்கு நம்பிபிக்கை ஊட்டுவதாகவும் அமையும்.

கூடவே முன்னைய பயனாளிகளின் பங்களிப்புடன் தற்போதைய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்கவும் முடியும்.

மேலும் 75 ஆண்டுகளுக்கு மேல் நிதி உதவியை மாத்திரம் வழங்கிவரும் இந்தத் திட்டத்தில் சமகாலத்தில் சிறந்த பெறுபேறு பெறும் பயனாளி  மாணவர்களுக்கு இந்தியாவில் சென்று பட்டம், பட்டப்பின் கற்கைகளை தொடரும் வகையிலான புலமைப் பரிசில் திட்டங்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன் வர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள இந்திய புலமைப் பரிசில் கற்கை நெறிகள் போட்டி நிறைந்ததாக உள்ளது.

எனவே சிறப்புத் திட்டமாக (Affirmative)  நிதியத்தில் உதவி பெற்ற மாணவர்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பட்டதாரிகளாகும் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இவை கலாநிதி பட்டம் வரை கூட விஸ்தரிக்கப்படலாம்.

குறிப்பாக மலையகத்தில் விஞ்ஞான பாடத்தைக் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்குவதற்கு இந்தப் புலமைப் பரிசில் கற்கைத் திட்டம் கவனம் செலுத்த வேண்டும். தற்போதும் விஞ்ஞான பாட ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பயிற்சி நெறிகளை இந்தியா வழங்கி வருகிறது. அது ஆசிரியார்களின் வான்மை விருத்தியை அதிகரிக்குமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்காது.

எனவே எண்ணிக்கையை அதிகரிக்கும் உபாயமாக உயர் தர விஞ்ஞான பிரிவில் சித்திகளைப் பெற்றும் இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் வாய்ப்பு கிடைக்காத மலையக  மாணவர்களுக்கு இந்திய புலமைப் பரிசில்களை வழங்குவது சிறந்த ஏற்பாடாக அமையும். இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் கண்டி காரியாலயத்துக்கே அதிக பொறுப்பு உள்ளது. ஏனெனில் பெருந்தோட்டப் பகுதிகள் சார்ந்த விடயங்களைக் கையாள்வது அதன் முதன்மைப் பணியாகும் என எண்ணுகிறேன்.

இது தவிர்ந்த தமிழகத்தில்  வாழும் இலங்கை  அகதிகளில் நாடற்றவர்களான சுமார் முப்பத்தினாயிரம்  'இந்திய வம்சாவளி'  இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதையும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இலங்கையில் வாழும் நாங்கள் அரசியல் அடிப்படையில் 'இலங்கை மலையகத் தமிழர்கள்' என அங்கீகரிக்கப்படும் அதே நேரம் நாம் பண்பாட்டு அடிப்படையில் இந்திய வம்சாவளியினர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை எமது கலை, கலாசார பண்பாட்டு அம்சங்களில் அவதானிக்கலாம்.

இந்திய வீடமைப்புத் திட்டம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்காக இந்திய அரசுக்கு நன்றி கூறுவதோடு அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தாமதங்கள், சிக்கல்களைத் தீர்க்க அதிகாரிகள் மட்டத்தில் அல்லாது உயர் அரசியல் மட்டத்தில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .