2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

“நல்லாட்சி அரசாங்கம் மீது அதிருப்தி”

Kogilavani   / 2017 ஜூன் 12 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருப்பது நியாயமானதேயாகும். அவரது இடத்தில் நான் இருந்திருந்தாலும் அதனையேதான் செய்திருப்பேன்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

“கல்வி இராஜாங்க அமைச்சர் இரதாகிருஷ்ணன் மட்டுமல்ல நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவருமே, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடனே உள்ளனர். எனவே, அரசாங்கமானது இவ்விடயத்தில் கூடியக் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் சேவைகளை திறம்பட முன்னெடுக்கவும் போதிய அதிகாரங்களையும் வளப்பகர்வுகளை மேற்கொள்ளவும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க, அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

பதுளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“வடக்குக்கும் மலையகத்துக்குமான நல்லுறவுகள் தொடர வேண்டும். இதன்மூலம் பாரிய நன்மைகளை, வடக்கு மற்றும் மலையக மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். மலையக மக்களின் பிரதிநிதிகள் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடனும் வடக்கு, கிழக்கு மாகாண பிரதிநிதிகள் மலையக மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி, நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

“இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவதானது, இனத்துவ அடையாளத்துக்கு எடுத்துக்காட்டாகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அடித்தளமுமாகவும் அமையும். அந்தவகையில், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் மலையக வருகையானது வடக்குக்கும் மலையகத்துக்குமான ஓர் உறவுப்பாலமாக அமைந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

“கல்வியொன்றினால் மட்டுமே, சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்று கூறும் மக்கள் பிரதிநிதிகள், கல்வியை முன்னிலைப்படுத்திய வகையில், ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

“பல்வேறு நெருக்குதல்கள், பிரச்சினைகள், அடக்குமுறைகள் நிலவிய போதிலும் வடக்கு மாகாண மாணவ சமூகம் கல்வித்துறையில் பின்னடையவில்லை. அது போன்றதோர் சூழல், மலையகத்திலும் ஏற்படல் வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .