2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

நானுஓயாவில் சிறுமி மரணம்; ஐவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 ஜூன் 21 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நானுஓயாவில் சிறுமியொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்பட்ட பதற்றமான நிலைக்குக் காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் மாலை கைதுசெய்யப்பட்ட ஐவரையும், எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இந்திக ருவன் த சில்வா, உத்தரவிட்டார்.

ரதெல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், நானுஓயாவைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர் மற்றும் தனியார் பஸ்ஸின் சாரதிகள் இருவரே, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா நகரத்தில், பாதசாரி கடவை ஊடாக பாதையைக் கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில், அச்சிறுமி ஸ்தலத்திலேயே, உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம், நானுஓயா பொலிஸ் நிலையத்துக்கும் எடின்பரோ தோட்டத்துக்கும் செல்லும் சந்தியில், கடந்த வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் இடம்பெற்றது.

நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்ற, ரதெல்ல கீழ்பிரிவு பகுதியைச் சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற சிறுமியே, விபத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், கனரக வாகனத்துக்கும் தீ வைக்கப்பட்டது.
அரசாங்க சொத்துக்கு சேதம் விளைவித்தமை, அரச சேவையாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை, அரச அதிகாரிகளுடன் முறையற்ற வகையில் நடந்துகொண்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 50 பேரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .