Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைக் கொடுப்பனவை, கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மூலம், வரவு-செலவுத் திட்டத்தினூடாக வழங்கப்படவுள்ள 50 ரூபாய் கொடுப்பனவை இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதி செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சியால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு - செலவுத்திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில், 1 வருடத்துக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், ஆனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிலுவை வழங்கப்படாமைக்கு, இந்த 50 ரூபாயே காரணம் என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனவே, இந்த 50 ரூபாய்க் கொடுப்பனவை இடைநிறுத்தினால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால், நிலுவைத் தொகையைப் பெற்றுக்கொடுக்க முடியுமா என்று அவர் கேள்வியெழுப்பினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிலுவைச் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, இந்தக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றும் இந்தத் துரோகத்தனமான ஒப்பந்தத்தை மூடி மறைப்பதற்கே, இ.தொ.கா, மக்கள் மத்தியில் போலிப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், மலையகத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் முன்னெடுத்து வரும் பல்வேறு வேலைத் திட்டங்கள் குறித்து, சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்துகளை வெளியிடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அதிர்ஷ்டத்தில் கிடைத்த நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதாக வாக்குறுதியை வழங்கிய போதும், அவ்வாறு அவர் நடந்து கொள்ளாமல், ஆயிரம் ரூபாயைச் சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்த தோட்டத் தொழிலாளர்களுக்கு, 20 ரூபாய் சம்பளத்தை அதிகரித்ததே அவர் செய்த சாதனை என்று அறிக்கையிடுவதை, புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
36 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
01 May 2026