2026 மே 09, சனிக்கிழமை

பதுளை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் 2,178 ஏக்கர் தேயிலைக் காணிகள்

Editorial   / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா          

பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்களில், 2,178 ஏக்கர் தேயிலைக் காணிகள் எத்தகையப் பயனுமின்றி, கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய, நீதி, சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இத்தகையக் காணிகளை, இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள மக்களை குடியமர்த்துவதற்காகப் பகிர்ந்தளிக்குமாறும் பணித்துள்ளார்.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,  கைவிடப்பட்டுள்ள 2,178 ஏக்கரைவிட மேலும் 2,547 ஏக்கர் தேயிலைக் காணியில், ஆகக் குறைந்த வருமானமே ஈட்டப்படுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய பயனற்றுக் கிடக்கும் காணிகளை, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு, இடர்முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெருந்தோட்டங்களை, பெருந்தோட்டக் கம்பனிகள் நீண்டகால குத்தகைக்கே பெற்றிருக்கின்றன என்றும், பெருந்தோட்டங்கள் அக் கம்பனிகளுக்கு சொந்தமானவையல்ல என்றும் தெரிவித்ததுடன், பெருந்தோட்டங்களின் அனைத்து காணிகளும் அரசுக்கே சொந்தமானது என்றும் தெரிவித்தார்.

எனவே, அந்தத் தேயிலைக் காணிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் அரசுக்கே உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் கிராமவாசிகளுக்கு, கிராமங்களில் உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றும் எனவே, கைவிடப்பட்ட, ஆகக் குறைந்த வருமானத்தைத் தரும் தேயிலைக் காணிகளை அத்தகையவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

இவ்விடயத்தில், நன்கு பயன்தரும், வருமானம் தரக்கூடிய பெருந்தோட்டக் காணிகளை எவ்வகையிலும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .