2026 மே 02, சனிக்கிழமை

‘புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது’

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகேஸ்வரி விஜயனந்தன்

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட விடயமாகவே, 50 ரூபாய் விடயத்தை தான் பார்ப்பதாக, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மாகாண சபை அமைச்சரான தன்னால், ஊவா மாகாண கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கான இடைக்கால கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகப் பிரதிநிதிகளால் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க முடியாதா என்று, ஊவா மாகாண சபையின் தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பினார்.

50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவு இந்த மாதமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமைக் குறித்து, அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,

கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர்கள் 837 பேருக்கு, மாதாந்தம் 2,500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான பரிந்துரையை, கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அது தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கூட்டுறவு ஊழியர்கள் 900  பேரின் வாழ்வாதாரத்தைப் பார்த்து ,அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை தான் முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மாகாண சபை அமைச்சரான தனது தகுதிக்கு, ஒரு நாளைக்கு 100 ரூபாயை அதிகரிக்க முடியுமெனில் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் அங்கம் வகித்துக் கொண்டிருப்பவர்களால், ஒரு நாளைக்கு 200 ரூபாயையாவது அதிகரிக்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“எனவே தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இவர்கள் ஆரம்பத்திலிருந்து அமையாக இருந்திருக்க வேண்டும், இல்லையேல் சம்பள அதிகரிப்பையாவது வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல் எங்களைக் குழப்பும் நடவடிக்கையை மாத்திரமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகப் பிரதிநிதிகள் முன்னெடுத்தனர்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .