2026 மே 09, சனிக்கிழமை

’பொதுத் தேர்தலில் மொட்டு அணி வெற்றிநடைபோடும்’

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை போன்று, நாடாளுன்றத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிநடை போடும் என்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில், இன்று (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தமது தரப்பு ஆட்சியமைத்திருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையிலுள்ள நிதியைப் பயன்படுத்தியே, நிர்வாகம் நடைபெற்று வந்ததாகவும்  கடந்த ஆட்சியின் போது, வீதி புனரமைப்பு உட்பட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர்கள், உரம் வழங்கியவர்கள் என பல தரப்புகளுக்கும் செலுத்தவேண்டிய கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இவற்றைச் செலுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே, மேலதிக நிதிகோரி இடைக்கால கணக்கறிக்கையொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அதனை தோற்கடித்து, குறுகிய அரசியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் முயற்சித்ததாகவும் இதனால், நிதி அறிக்கையை அரசாங்கம் மீளப்பெற்றதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், “அரசாங்கம் இவ்வாறு மீளப்பெற்றமை தங்களுக்கு கிடைத்த வெற்றியென அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியானது மென்மேலும் பிளவடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

இதேவேளை, இந்த நாட்டில் சமூகம், பொருளாதாரம், கலாசாரம், தனித்துவம் என அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியால் சீரழிக்கப்பட்டன. இதன் காரணமாகவே கட்சி, நிறம் ஆகியவற்றை மறந்து, தமக்கென தாய் நாடும், தேசிய அடையாளங்களும் வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி தேர்தலின்போது ஓரணியில் திரண்டீர்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அமோக ஆதரவை வழங்கினீர்கள்.

“நாட்டுக்காக சிறப்பான சேவைகளை மூன்னெடுப்பதற்கு ஜனாதிபதி முற்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததால் தேவையான சட்டமூலங்களைப் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.  எனவே, அடுத்த பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே எமது எதிர்பார்ப்பாகும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டு வருகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .