2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மலையக மக்களுக்கான நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கணேசன்

மலையக மக்களுக்கான சமூக நீதி தொடர்ச்சியாக மீறப்படுகின்றது. கல்வி, காணி, பொருளாதாரம் என மிக முக்கியமான உரிமைகள்கூட  மறுக்கப்படுகின்றன. இந்நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.  மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் . என்று தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2000 ரூபாய் வழங்கப்பட  வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து ஹட்டனில் நேற்று முன்தினம் (7)  கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர். இதன்போது தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத்துகள் வருமாறு, 

மலையகத் தமிழர்களும் ஓர் தேசிய இத்துக்குரியவர்கள். எனினும், அவர்களுக்கான சமூக நீதி மீறப்படுகின்றது.  கல்வி உரிமை, காணி உரிமை, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.  எதையும் போராடியே பெற வேண்டும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலைமை நீடிப்பதை அனுமதிக்க முடியாது.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கின்ற மலையக பெருந்தோட்டங்களை பாதுகாக்க வேண்டும். அப்படியானால் தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. எனவே, அடிப்படை நாட் சம்பளமாக 2000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.  அதற்கான அழுத்தங்கள் தொடரும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கும், தொழில் இல்லாதவர்களுக்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும். உற்பத்திக்காக நிலங்களை வழங்கலாம் என ஜனாதிபதிகூட முன்மொழிவு செய்திருந்தார். ஆனால் இதற்கு மாறாக தோட்டக் கம்பனிகள் செயற்படுகின்றன. எமது மக்களுக்கான காணி உரிமை அவசியம்.  என்று பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X