2025 மே 12, திங்கட்கிழமை

’மலையகத்துக்கான 10,000 வீட்டுத்திட்டம் நவம்பரில் ஆரம்பம்’

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.கேதீஸ்

மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டம், எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு, தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவுக்கான வீதியை, கார்பட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள், இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, மேலும் உரையாற்றிய அவர்,  பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட துறைசார் அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், தோட்டப்பகுதிகளில், 384 கிலோமீற்றர் அளவு வீதிகள், புனரமைக்கப்படாமல் உள்ளது என்றும் அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள், தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உறுதியளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

மலையகத்தில் தான், வீட்டுப்பிரச்சினை இருப்பதாக கூறிய அவர், எமது மக்களுக்கு இன்னும் நிலவுரிமை கிடைக்கவில்லை என்றும் அந்த உரிமையை வழங்கினால், வெளிநாடுகளிலுள்ள இளைஞர்கள், வீடுகளை கட்டிக்கொள்வார்கள் என்றும்  அவர் கூறினார்.

இந்நிலையில், இந்தியாவின் 10ஆயிரம் வீட்டுத்திட்டம், நவம்பரில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

5 ஆண்டுகளில் 60 ஆயிரம் வீடுகளை கட்டமுடிந்தால், மீதமுள்ள 2 லட்சம் பேருக்கு என்ன செய்வது என்று கேள்வியெழுப்பிய அவர், எனவே, எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கினால், வெளிநாடுகளில் உள்ளவர்களாவது, வீடுகளை நிர்மாணிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாகச் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது விடயத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும், தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்தத் தொகை பெற்றுக் கொடுக்கப்படும்” என்றும் கூறினார்.

“மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை. அதேவேளை, பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவிக்கும் கலாசாரத்தையும் நாம் குறைத்துக் கொள்வோம். அரசியல்வாதிகளுக்காகச் செலவிடும் அந்தப் பணத்தை, குழந்தைகளின் கல்வித் தேவைக்குப் பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக, நாம் கோபமடையப் போவதில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X