2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மலையகத்துக்கு மாவை விநியோகிக்க எதற்காக அமைச்சு?

R.Maheshwary   / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

" மலையகத்தில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுக்காத தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சானது,  தற்போது கோதுமை மாவை விநியோகிக்க பார்க்கின்றது என  தெரிவித்த, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார், மாவை விநியோகிப்பதற்கு மலையகத்துக்கு எதற்கு அமைச்சு என கேள்வி எழுப்பியுள்ளார்.  

இராகலை-  வலப்பனை நகர மண்டபத்தில் நேற்று (9) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

" மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்ல பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. இனிவரும் நாட்களில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம். அரிசி விலையும் சடுதியாக அதிகரிக்கப்படலாம்.  இவ்வாறு நாட்டு மக்களை இந்த ஆட்சியாளர்கள் படுபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கு அந்த கொடுப்பனவை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் நாட்டில் வருமானம் இன்றி, பணத்தை அச்சிட்டு இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்குவதால் பிரச்சினைகள் தீராது. அது மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தும்.
 
அதேபோல ஏனையோருக்கு 5 ஆயிரம் வழங்கப்படும்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வெறும் 500 ரூபாவுக்கு நிவாரணம். அதுவும் கோதுமைமா. அந்த கோதுமைமாவை கூட தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு ஊடாக விநியோகிக்கப்படும் என அந்த இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

 மலையகத்தில் இன்னும் ஒரு வீட்டைக்கூட கட்டாத அந்த அமைச்சர் மாவை விநியோகித்து - அரசியல் செய்ய பார்க்கின்றார். திகாம்பரம் கட்டிய வீடுகளுக்குதான் அவர்கள் இன்று திறப்பு விழா நடத்துகின்றனர். மாவை விநியோகிக்க மலையகத்துக்கு எதற்கு அமைச்சு? அது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சா அல்லது மாவு விநியோக அமைச்சா என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X