2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஹட்டனில் ஆர்ப்பாட்டம்: பதுளையில் சத்தியாக்கிரகம்

Kogilavani   / 2016 மே 02 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.கோகுலன்

ஹட்டனில்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்கப்படாமையைக் கண்டித்தும் மே தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கறுப்புப் பட்டி அணிந்து, ஹட்டன் பஸ் நிலையத்துக்கு முன்பாக சமூக சிந்தனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

'பெருந்தோட்டத் தொழிலாளர்;களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம்; பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, தோட்டத் தொழிலாளர்;களை மலையகக் தொழிற்சங்கவாதிகள் ஏமாற்றி வருகின்றனர்.

உழைப்பாளிகளுக்கான தினத்தில்கூட, மேடைகளை அமைத்து தொழிலாளர்;களை கௌரவிக்காது,  பொய்யான பிரசாரங்களை மாத்திரம் மேடையேற்றி வருகின்றனர்' என, ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மலையக அரசியல்வாதிகள் கூறியவாறு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைத் தோட்டத் தொழிலாளர்;களுக்கு வழங்காவிட்டால்,  எதிர்;வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் ஒவ்வொரு தோட்டப் பகுதிக்கும் சென்று, கறுப்புக்கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  ஆர்ப்;பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

பதுளையில்...

பதுளை மாவட்ட சிவில் அமைப்புக்களும் தோட்டத் தொழிற்சங்கங்கள் சிலவும் இணைந்து, பதுளை பஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்துக்கும் பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்றிருக்கும் கம்பனிகளுக்கும் அழுத்தங்களைக் கொடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குப் தீர்வு  காண்பதே இப்போராட்டத்தின் முக்கிய நோக்கமென  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 09 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'தோட்டத் தொழிலாளர்களுக்கு இருபது பேர்ச் காணி உரிமையுடன் கூடிய தனி வீடு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும், நிர்மாணிக்கப்பட்டிருக்கும் தோட்ட விடுகளுக்குச் சட்டரீதியான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படல் வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படுவது அல்லது மாதச் சம்பளத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் உள்வாங்கப்படுதல், தோட்ட நிருவாக மட்டத்தில் ஏற்படுகின்ற தொழில் வெற்றிடங்களுக்குத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்குதல்' என, பல்வேறு கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

மேலும், அனைத்துப் பெருந்தோட்டங்களையும் தோட்ட நிர்வாகங்களுக்கு அப்பாற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் கொண்டுவரப்படுதல், கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிலாளர் சேம நலன் குறித்த விடயங்களை முறையாகவும் கிரமமாகவும் அமுல்படுத்தல், தோட்டத் தொழிலை இழிவுபடுத்துவது உடன் தவிர்க்கப்படல், ஏனைய  தொழில்களுக்குரிய அந்தஸ்து தோட்டத் தொழில்துறைக்கும் வழங்கப்படல் வேண்டும், ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன

பதுளை மாவட்ட சிவில் அமைப்புகளான ஊவா சக்தி நிறுவனம், எதிர்காலம் எமது கரங்களில் அமைப்பு, ஊவா வலம்புரி மலையக அமைப்பு, யுனி மீடியா நிறுவனம், லிட்ஸ் மலையக அமைப்பு, ஐ.தோ.தொழிலாளர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி, சன்ரைஸ் அமைப்பு, பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி இணையம், மலையக சமூக அபிவிருத்திக்கழகம், கிராமியப் பெண்கள் முன்னணி, பகி பாலசந்திரன் அமைப்பு ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .