2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஹட்டன் ரயில் நிலையத்தில் குவிந்துள்ள பொதிகள்

Editorial   / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ  

மலையக ரயில் சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வந்துசேரும் பயணப் பொதிகளை ஏற்க மறுப்பதால், கடந்த ஒரு வார காலமாக, ஹட்டன் ரயில் நிலையத்தில் பொதிகள் குவிந்து கிடப்பதாகவும் இதனால், வியாபாரிகளும் பயணிகளும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

ரயில்களுக்கூடாகப் பொதிகளை அனுப்புவது மிகவும் இலகுவானது என்பதால், பயணிகள், ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட தொகைக் கட்டணத்தைச் செலுத்தி, பயணப் பொதிகளை அனுப்புகின்றனர். இதனால், வருடாந்தம் ரயில் திணைக்களத்துக்கும் பாரிய வருவாய் கிடைக்கிறது. 

தற்போது பண்டிகைக் காலம் என்பதால், கொழும்பு உள்ளிட்ட தூரப் பிரதேசங்களுக்கு அனுப்புவதற்காக, பயணிகள் கட்டணங்களைச் செலுத்தி, பொதிகளை ஹட்டன் ரயில் நிலையத்துக்கு வழங்கியுள்ளனர். 

இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்களில், உணவுப்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிறிஸ்மஸ் மரங்கள், வியாபாரப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், ரயிலில் கடமையாற்றும் அதிகாரிகள், ஹட்டன் ரயில் நிலையத்திலுள்ள பொதிகளை மட்டும் ஏற்க மறுப்பதால், கடந்த ஒரு வாரகாலமாக, குறித்த ரயில் நிலையத்தில் பொதிகள் குவிந்து கிடக்கின்றன. 

உரிய நேரத்துக்கு மேற்படிப் பொருட்கள் அனுப்பப்படாததால், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளன என்றும் இதனால், பொறுப்பேற்கப்பட்ட பொதிகள் அனைத்தையும் பயணிகளிடமே திருப்பி அனுப்புவதாகவும், ஹட்டன் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஹட்டன் ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயிலில் பொதிகளை ஏற்கும் அதிகாதிகளுக்கும் இடையிலான கடமை நிமித்த முரண்பாடுகளே, இதற்குக் காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 

பண்டிகைக் காலத்தில், பயணிகள் மற்றும் வியாபாரிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ரயில் திணைக்களம் நடந்துகொள்வதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதற்கெதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .