2025 ஜூன் 25, புதன்கிழமை

கொழும்பு வாழ் தமிழ் கல்வி சமூகம் எம்மை ஆதரிக்க வேண்டும்: மனோ கணேசன்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு கல்வி வலயத்தில் அமைந்திருக்கக்கூடிய தமிழ் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் உள்ளடங்கிய தலைநகர தமிழ் கல்வி சமூகம் உறுதியுடன் ஏணிச் சின்னத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். மாறுவேடங்களில் வரும் துரோகிகளை புறக்கணித்து, ஜனநாயக மக்கள் முன்னணியின் நேர்மையான பயணத்தை பலப்படுத்தவேண்டும் என முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபையின் முதன்மை வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசனின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...
 
தலைநகர தமிழ் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை மேல்மாகாணசபை உறுப்பினராகவும், அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் நான் பணியாற்றியுள்ளேன். கல்வித்துறைக்கு முன்னுரிமை அளித்திடவேண்டும் என்ற எனது வழிகாட்டலின் கீழ் எங்களது மாகாணசபை உறுப்பினர்களும் பணியாற்றி வருகின்றார்கள். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையின் கீழ் கொழும்பு மாவட்ட தமிழ் கல்வித்துறைக்கு புத்துணர்ச்சியும் பாதுகாப்பும் கிடைத்தது என்பது தலைநகர தமிழர்கள் மத்தியிலே மறுக்கப்படாத உண்மையாகும்.
 
பேரினவாதிகளை எதிர்த்து நின்று மூடப்பட இருந்த பல தமிழ் பாடசாலைகளை நாங்கள் காப்பாற்றி இருக்கின்றோம். பெருந்தொகையான பாடசாலைகளுக்கு நல்ல தமிழ், நாகரீக பெயர்களை சூட்டி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு புதிய அந்தஸ்தை நாங்கள் வாங்கித் தந்திருக்கின்றோம். தெமட்டகொடை விபுலானந்தவிற்கும், கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் வித்தியாலயத்திற்கும் அவ்வேளையில் மறுக்கப்பட்ட நவோதயா அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தோம். தென் கொழும்பின் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கும் இணையான வளர்ச்சியை பெறும் முகமாக வட-மத்திய கொழும்பிலே மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்தையும், கணபதி இந்து மகளிர் வித்தியாலயத்தை உருமாற்றி ஸ்தாபித்துள்ளோம். இந்த இரண்டு பாடசாலைகளும் எதிர்காலத்திலே கொழும்பின் தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசியப் பாடசாலைகளாக வளர்ச்சிபெறுவதற்கான அஸ்திபாரத்தை நாங்கள் உறுதியாக இட்டிருக்கின்றோம். அதேபோல் மத்திய கொழும்பு இந்து வித்தியாலயத்திற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு அஸ்திபாரம் இட்டு கட்டிகொடுத்துள்ளோம். பெருந்தொகையான தமிழ் பாடசாலைகளின் கட்டிடம் மற்றும் கழிவறை தொகுதிகளையும் கட்டி கொடுத்து, தளபாடங்களையும் வழங்கியுள்ளோம். தமிழ் பாடசாலைகளை பாரபட்சமாக நடத்த முடியாது என்ற செய்தியை மாகாண மற்றும் மத்திய கல்வி அமைச்சுகளுக்கு உறுதியுடன் தெரிவித்துள்ளோம்.
 
இவையெல்லாம் நாங்கள் செய்துவந்து கொண்டிருக்கும் பணிகளின் ஒரு பகுதியாகும். இவற்றை புறக்கணித்துவிட்டு, தலைநகர கல்வி சமூகத்தை ஏமாற்றி, மிரட்டி தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்கு இன்று ஒரு கோஷ்டி புறப்பட்டுள்ளது. எவரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் உரிய மரியாதை கிடைத்திடும். இடம் மாறிவிட்டால் மரியாதை மறுக்கடிக்கப்பட்டு விடும் என்ற, நமது இளம் மாணவர்கள் அறிந்துகொண்டிருக்கும் போதனையைக்கூட புரிந்து கொள்ள மறுக்கும் நபர்களை தலைநகர தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்றம் தரும் ஏணிச் சின்னத்திற்கு வாக்களித்து தலைநகர தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியை உறுதிப்படுத்துமாறு பாசமிகு அதிபர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பழைய மாணவர்களையும் வேண்டுகிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .