2025 ஜூன் 25, புதன்கிழமை

'வாடகை குடியிருப்பாளர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யலாம்'

Super User   / 2011 நவம்பர் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பத்தவர்கள்; தங்களது பெயர்களை 2011ம் வருடத்திற்கான வாக்காளர் இடாப்பில் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளலாம். இதுதொடர்பிலான புதிய விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம். இப்புதிய விண்ணப்பப்பவடிங்கள் நிரப்பப்பட்டு இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் கையளிக்கபட வேண்டும். இதற்கான இணக்கப்பாடு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் தேர்தல் செயலகத்தில் இன்று நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஏற்பட்டுள்ளது என  ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

அச்செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடகொழும்பு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு மேற்கு, கொழும்பு தெற்கு, தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, கொலொன்னாவை, அவிசாவளை ஆகிய கொழும்பு மாவட்ட தொகுதிகளிலும், வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல ஆகிய கம்பஹா மாவட்ட தொகுதிகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்துக்கொள்வதில் ஏற்படும் சிரமம் தொடர்பிலே ஜமமு தலைவர் மனோ கணேசன் தேர்தல் ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் ஜெரோம் விக்ணேஸ்வரனும் கலந்துகொண்டார். இச்சந்திப்பின்போது இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
 
வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள்

வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பத்தவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம். இதற்காக வீட்டு உரிமையாளரின் கையெழுத்தோ அல்லது ஒப்புதலோ அவசியமில்லை. இதற்கான புதிய விண்ணப்பப்படிவங்களை தேர்தல் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 இப்படிவங்களை நிரப்பி கையளிப்பதற்கு கிராமசேவர்களின் அத்தாட்சி கையொப்பம் அவசியமில்லை. இப்படிவங்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் முன்னணியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவர்கள் மூலமாகவும் இப்படிவங்களை விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரப்பப்படும் படிவங்களை தேர்தல் ஆணையாளருக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம். அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவர்களும், இவற்றை வீடு வீடாக வந்து சேகரிப்பார்கள். அவை அனைத்தும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்படும்.
 
வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை பிரஜைகள்

வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தமாகவோ அல்லது உயர்கல்வி காரணமாகவோ சென்றுள்ள குடும்ப அங்கத்தவர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர் படிவத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இச்சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் வாழ்கின்ற குடும்ப அங்கத்தவர்களின் வெளிநாட்டு வதிவிட முகவரியையும், அவர்களது இலங்கை கடவுச்சீட்டின் இலக்கத்தையும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும்.
 
இவ்வருடத்திற்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்

இவ்வருட ஜூன் மாதத்திலே விநியோகிக்கப்பட்ட வாக்காளர் விண்ணப்பப்படிவங்களை நிரப்பி கையளித்தவர்கள், தற்சமயம் தற்காலிமாக தயாரிக்கப்பட்டுள்ள இவ்வருடத்திற்கான வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளனவா என சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்காக இவ்வருடம் தற்காலிகமாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் தேர்தல் அலுவலகங்களிலும், ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இப்பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லாதவர்கள் புதிய படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து கையளிக்கலாம்.
 
ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கையளிக்காதவர்கள்

ஏற்கனவே ஜூன் மாதத்தில் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்த பலர் அவற்றை கையளிக்க தவறியுள்ளார்கள். இத்தகையவர்களின் பெயர்கள் இவ்வருடத்திற்காக தற்காலிமாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. எனவே இத்தகையோர் புதிய படிவங்களை பெற்று அவற்றை மீள் நிரப்பி கையளிக்கலாம்.
 
ஒருபோதுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துக்கொள்ளாதவர்கள்

வாக்களிக்கும் வயது பூர்த்தியடைந்தும் தொடர்ச்சியாக வாடகை வீடுகளில் குடியிருக்கும் காரணத்தினாலே, வாக்காளர்களாக தங்களை ஒருபோதுமே பதிவு செய்து கொள்ளாத பெருந்தொகையானோர் மேல் மாகாணத்திலே வாழ்கின்றார்கள்.
இத்தகையோரும் எவ்வித சிக்கலும் இன்றி புதிய படிவங்களை பெற்று நிரப்பி கையளிக்கலாம். இத்தகைய புதிய விண்ணப்பதாரிகள் தங்களது நிலைமையை தெளிவுப்படுத்தும் சத்தியக்கடதாசிகளை கையெழுத்திட்டு தமது விண்ணப்பப்படிவங்களுடன் இணைக்க வேண்டும். இதற்கான மாதிரி சத்தியக்கடதாசிகளை ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகங்களிலும், முன்னணியின் தேர்தல் முகவர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
 


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 09 November 2011 10:00 PM

    ஆம் வாக்குகளை பெற்று மொத்தமாக பேரம் பேசி ஒரு எம் பீ பதவியை பெற்றுக்கொள்ளலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .