2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தமிழ்ச்சங்க ஒழுங்கை என்ற பெயர் மாற்றத்தை தடுப்பது இனவாத செயலாகும்: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள ஒழுங்கைக்கு தமிழ்ச்சங்க ஒழுங்கை என்ற பெயர்மாற்றத்தை ஏற்படுத்த பாரிய அளவில் செயல்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான வேலணை வேணியன் அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவிக்கும் அதேவேளை, இதனை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் செயல் இனவாதமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

மாநகரசபை உறுப்பினர்  வேலணை வேணியனின் முயற்சியின் மூலம் இவ்வொழுங்கை தமிழ்ச்சங்க ஒழுங்கை என பெயர் மாற்றம் பெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இனவாதிகளினால் இம்முயற்சியை நடைமுறைப்படுத்துவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து குரல் கொடுத்திருக்கும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரை நான் பாராட்டுகிறேன்.

தலைநகரில் தமிழ் வளர்வதற்கு அர்ப்பணிப்பை செய்திருக்கும் தமிழ்ச்சங்கத்தின் பெயரை இவ்வொழுங்கைக்கு சூடுவது பொருத்தமான செயலாகும். இதனை தடுப்பது ஜனநாயக விரோத இனவாத செயலாகும்.

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் ஐ.டி.சி. ரோட் என்ற சர்வதே பௌத்த மதத்தை குறிக்கும் ஒழுங்கை உள்ளது. இதனை தமிழர் எவரும் எதிர்க்கவில்லை.

அப்படியிருக்கும் பொழுது தமிழ்ச்சங்க ஒழுங்கைக்கு பெயர் மாற்றத்தை மட்டும் தடை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது. இது சம்பந்தமாக உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளேன்.

தலைநகரில் தமிழ் மொழி வளர்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இனவாதிகளினால் தடுக்கப்படுமேயானால் பாரிய விளைவை அவர்கள் எதிர் நோக்க வேண்டியிருக்கும். பெரியவர் வேலணை வேனியனின் இம்முயற்சி கைகூடுவதற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .