2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதி அமைச்சிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இலங்கை சட்ட மன்ற கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது 195 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இவர்கள் அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நியமிக்ப்பட்டுள்ளனர். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"கடந்த காலங்களில் வேலையற்றிருந்த பட்டதாரிகளாகிய நீங்கள் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் கோட்டை புகையிரத நிலையம் உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தீர்கள்.

எனினும் ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழ் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இப்பொழுது உங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் நீங்கள் விரக்தியின் விளிம்பில்; இருந்து மீண்டிருக்கிறீர்கள்.

உங்களை கற்பிப்பதற்கு பெற்றோர் பல சிரமங்களை அனுபவித்துள்ளனர். நீங்கள் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தொழில் புரிவதோடு நின்று விடாமல் பட்டப்பின் படிப்பை மேற்கொண்டு மேலும் முன்னேற முயற்சிக்க வேண்டும்.

இலங்கை நிருவாக சேவை, வெளிநாட்டு சேவை, கணக்காளர் சேவை போன்ற பரீட்சைகளுக்கும் தோற்றி அவற்றிலும் சித்திபெற்று உயர்ப தவிகளுக்கு செல்லும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. 

நாட்டின் அரசியல் அமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டத்துறை, நீதித்துறை என வலு வேறாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முக்கிய துறைகளில் ஒன்றான நீதித்துறையின் கீழ் நீங்கள் பணியாற்றப் போகிறீர்கள். மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நீங்கள் கடமையில் ஈடுபட வேண்டும்.

வேலையற்றிருந்த உங்களைப் போன்ற பட்டதாரிகள் அத்தனைப் பேருக்கும் உரிய தொழில் வாய்ப்புகளை வழங்கியது இலேசான காரியமல்ல. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் என்பவற்றின் வேண்டுகோள்களையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி திறைசேரிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக உங்களுக்கு இந்த அறிய வாய்ப்பு கிட்டியுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்" என்றார்.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, மேலதிகச் செயலாளர் சுனில் சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .