2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்டக்கல்லூரிக்குள் பிரவேசித்து தாக்கியமை கண்டிக்கத்தக்கது: அஸாத் ஸாலி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 08 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொழும்பு சட்டக் கல்லூரிக்குள் நேற்று திங்கள்கிழமை பௌத்த பிக்குகளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பிரவேசித்து அங்குள்ளவர்களை தாக்கி அடாவடித்தனம் புரிந்தமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி சட்டக் கல்லூரிக்குள் புகுந்தே அட்டகாசம் புரிந்தவர்கள் மீது வழமை போல் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து நின்றமை அதைவிட கண்டிக்கத்தக்கதாகும்' என்று முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'சட்டக்கல்லூரிக்கு இம்முறை வழமையை விட முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையை ஒரு தேசிய பிரச்சினையாக்கி அதற்கு இனவாத சாயம் பூசி முஸ்லிம் மாணவர்கள் திறமையற்றவர்கள், கையாலாகதவர்கள் அவர்கள் எப்படி அதிகளவில் தெரிவு செய்யப்படலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளமை வெறும் இனவாதத்தால் எழும் பொறாமையே தவிர வேறொன்றும் இல்லை.

ஓப்பீட்டளவில் நாட்டில் நடக்கும் எல்லா பரீட்சைகளிலும் சித்தியடையும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இதை தெளிவுபடுத்தியுள்ளன. அப்படியானால் இந்த எல்லா பரீட்சைகளிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா?

இந்தப் பரீட்;சைகள் எல்லாம் இந்த இனவாதிகளும், அடிப்படைவாதிகளும் கூறுவதுபோல் முஸ்லிம்களுக்கு சார்பாகவா நடத்தப்பட்டுள்ளன? நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சமூகத்தை கேவலப்படுத்தி அதன் எதிர்காலத்தோடு விளையாட நினைக்கும் இந்த அடிப்படைவாதிகளிடம் ஒன்றை கேட்க நினைக்கின்றேன். இந்த நாட்டின் கல்வி அமைச்சரும் உயர் கல்வி அமைச்சரும் பரீட்சைகள் ஆணையாளரும் முஸ்லிம்களா?

இந்த நாட்டின் கல்வி முறை மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதன் சாதக பாதக விளைவுகளில் ஒன்று தான் முஸ்லிம்கள் அண்மையில் அடைந்து வரும் கல்வித்துறை முன்னேற்றம். இந்த நாட்டில் தமிழர்கள் தமது தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் உள்ளுர் பரீட்சைகளில் தோற்றுவது மிகவும் அரிது. சிங்களவர்கள் சிங்கள மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் பரீட்சைகளுக்குத் தோற்றுவது கிடையாது.

அது மட்டுமே அவர்களுக்கு சௌகரியமானது. ஆனால் முஸ்லிம்கள் அப்படியல்ல இந்த நாட்டில் மும்மொழி ஆற்றல் மிக்க ஒரே சமூகம் முஸ்லிம் சமூகம்தான் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒர் உண்மையாகும்.அவர்கள் மூன்று மொழிகளிலும் கல்வி கற்கின்றார்கள். மூன்று மொழிகளையும் தாய் மொழிகளாகக் கொண்டுள்ளவர்களும் முஸ்லிம்களே. மூன்று மொழிகளிலும் பொதுப் பரீட்சைகளுக்கும், போட்டிப் பரீட்சைகளுக்கும் முகம் கொடுக்கிளன்றார்கள்.

எனவே மும்மொழி பிரிவுகளில் இருந்தும் அவர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். அதுமட்டுமல்ல முஸ்லிம் சமூகக் கட்டமைப்புக்குள் கல்வி கற்க வேண்டும் என்ற பிரசாரங்கள், அதற்கான ஊக்குவிப்புக்கள் உதவித் திட்டங்கள் என்பனவும் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. பல தனவந்தர்கள் தமது சொந்தப் பணத்தில் வசதியற்ற முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக பல உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதனால் தூண்டப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் மும்மொழிகளிலும் தமது திறமையைக் காட்டி கல்வித் துறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் இல்லாத பிரச்சினையொன்றை உருவாக்கி நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்க முயலுகின்றனர். இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சாரும் இல்லையேல் நாடு படு பாதாளத்தில் செல்லுவதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுபவர்கள் எவராக இருப்பினும் அவர்களைக் கைது செய்து நீதியின் முன்னால் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது பொலிஸாரின் பொறுப்பாகும். அவர்கள் தொடர்ந்து இந்த விடயத்தில் அசமந்தமாக இருப்பது கவலைக்குரியதாகும். காவி உடை அணிந்தவர்கள் நினைத்தபடி எல்லாம் ஆட பொலிஸார் இடமளித்து வேடிக்கை பார்க்கும் நிலை நீடித்தால் பொலிஸார் மீதும்; சட்டம் ஒழங்கு என்பனவற்றின் மீதும் பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை என்பன அர்த்தமற்றுப் போய்விடும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • sham. Wednesday, 09 January 2013 05:36 AM

    சகோதரர் ஆசாத் சாலி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    Reply : 0       0

    Nawfal Wednesday, 09 January 2013 01:37 PM

    சபாஷ் அசாட் சாலி. காலத்திற்கேற்ற தைரியமான கருத்துக்கள்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .