2025 ஜூன் 21, சனிக்கிழமை

கொழும்பு நகரில் வசிப்பவர்களுக்கு அரச தொடர்மாடி வீடுகள்: பிரபா கணேசன்

A.P.Mathan   / 2015 ஜனவரி 06 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இங்கு வந்திருக்கும் 3,000 இற்கும் அதிகமான மக்கள் தங்களுக்கு அரச தொடர்மாடி வீடுகள் கிடைக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த வருடமும் அடுத்த வருடமும் கட்டி முடிக்கவிருக்கும் அரச தொடர்மாடி வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என நேற்று மாலை கொழும்பு மோதர பிரதீபா மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உரையாற்றும் போது மக்களுக்கு நேரடியாக உறுதியளித்தார். இக்கூட்டத்தில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

மேலும் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உரையாற்றும் போது,

கடந்த காலங்களில் அசுத்த கால்வாய்கள் மத்தியில் பலகை வீடுகளில் வசித்தவர்களின் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்ட பொழுது ஐ.தே.க வும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இம்மக்களை எமது அரசாங்கம் அவிசாவளையிலும் ஹோமாகமவிலும் குடியமர்த்தப் போகிறார்கள் என்று பிரசாரம் செய்து, இதை தடுத்து நிறுத்துவோம் என கூறி இம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால், எமது அரசாங்கம் அவர்களது இடத்திலேயே அரச தொடர்மாடி வீடுகளைக் கட்டி கொடுத்திருக்கிறார்கள். அரச தொடர்மாடி வீடுகளை வழங்கி பொய் பிரசாரத்தை முறியடித்துள்ளோம். அதேபோல் இன்னும் மூன்று வருடங்களுக்குள் கொழும்பு நகரில் கட்டப்படவிருக்கும் மூவாயிரத்திற்கும் அதிகமான வீடுகளை கொழும்பு நகரில் நிரந்தரமாக வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வழங்கவுள்ளோம். இதனை இங்கே வந்திருக்கும் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உங்களுக்கு உறுதிபடுத்துவார்.

கடந்த காலங்களில் உங்கள் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளை பல கோடி ரூபாய்களில் அபிவிருத்தி செய்தேன். மேலும் அபிவிருத்தி செய்வேன். அது மட்டுமின்றி இந்து ஆலயங்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் தேவையானவற்றை செய்துள்ளேன். மேலும் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை செய்துள்ளேன். கொழும்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு எல்லா இடங்களிலும் நீதியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். இவ் அனைத்தையும் ஊடக அறிக்கை விட்டு அரசியல் இலாபம் தேடிக் கொண்டதும் இல்லை. செய்ததைத் தான் சொல்கின்றேன். சொல்வதை தான் செய்வேன். இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் அரச தொடர்மாடி வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதில் உறுதியாக நிற்பேன்.

அதேபோல் இவ் அரச தொடர்மாடி வீடுகள் கிடைக்க வேண்டும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பல இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றி பெறப்போகும் ஜனாதிபதியின் வாக்குகளில் கொழும்பு நகர தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தால் தான் உரிமையுடன் வீடுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

மேலும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுகையில்,

இங்கு வந்திருக்கும் தமிழ் பேசும் மக்கள் நிரந்தர வீடுகள் இல்லாமல் வசிப்பதை எனக்கு பிரதி அமைச்சர் பிரபா கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வடகொழும்பு மக்களுக்கு நாங்கள் கட்டிக்கொண்டும் கட்டவிருக்கும் வீடுகளை நிச்சயமாக வழங்குவோம். சிறிய முற்பணத்துடன் மாதாந்த கொடுப்பனவுகள் மூலம் இவர்களுக்கு வழங்குவோம். ஆனால், இவர்கள் கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். கொழும்பில் வாக்குரிமை இருக்க வேண்டும் அல்லது இவர்களின் பிள்ளைகள் கொழும்பு நகரில் கல்வி பயில்பவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே நாங்கள் கட்டிய வீடுகள் 450 சதுர அடிகள் வீடுகளாகவே இருக்கின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய இனி கட்டவிருக்கும் வீடுகள் 550 சதுர அடி வீடுகளாக இருக்கும். உங்களின் தலைவர் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் உங்கள் பிரச்சினைகளை எப்போதும் எங்களிடம் கொண்டு வந்து, அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பவராக திகழ்கின்றார். 

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்து பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கரங்களை பலப்படுத்தி உங்களுக்கு அரச தொடர்மாடி வீடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான என்.ரவிகுமார், கலாநிதி கங்காதரன், எச்.எச்.விக்கிரமசிங்க, எம்.பிருதிவிராஜ், ஆர்.மேகநாதன், பாஸ்கரன் கணேசன் மற்றும் நகர அபிவிருத்திசபை அதிகாரிகள் ஆகியோர்களுடன் 3,000இற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .