2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேர்தல்கள் ஆணையாளரை மைத்திரி சந்தித்து முறைப்பாடு

Kanagaraj   / 2015 ஜனவரி 07 , மு.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


ப.பிறின்சியா டிக்சி


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து செவ்வாய்க்கிழமை (06) கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, எம்.ஏ சுமந்திரன், கருஜயசூரிய, ராஜித்த சேனாரத்ன விஜயதாஸ ராஜபக்ஷ முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா ஆகியோரும் சென்றிருந்தனர்.

தேர்தல்கள் ஆணையாளருடனான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் பல்வேறு வகையான மோசடிகளை அரசாங்கம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன. அவைத்தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தினோம்.

அத்தோடு போலியாகத் தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் விநியோகிப்பது குறித்தும் அதில் அன்னம் சின்னத்துக்கு பதிலாக  யானை சின்னம் வரையப்பட்டுள்ளமை, யானை சின்னத்துக்கு முன்பாக எனது பெயர் எழுதப்பட்டுள்ளமை குறித்தும் ஆணையாளருக்கு நாம் தெளிவுப்படுத்தினோம்.

மேலும் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய் பணமும் விநியோகிக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தோம். இவை தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் எனது முழுப்பெயரை பயன்படுத்த வில்லை. என்மீதிருந்த பயத்தினால் மைத்திரி என்றே அழைத்தனர்.

ஒரு பக்கம் அரசாங்கத்துக்கு அச்சம் இருந்தாலும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியீட்டுவதற்காக பல்வேறு மோசடிகளை செய்வதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது.

'சிறிசேன' எனும் பெயரில் மற்றுமொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிருக்கின்றார்.  அவர், தேர்தலிலிருந்து வாபஸ் பெறவிருக்கின்றார். அவர் வாபஸ் பெற்றால் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் 'சிறிசேன' ஜனாதிபதித் தேர்தலிருந்து வாபஸ் பெற்றுவிட்டார் என்று பொய் பிரசாரத்தை மேற்கொள்ள அரசாங்கம் திட்டம்தீட்டியுள்ளது.

எந்தவிதமான பொய் பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொண்டாலும் நானே மைத்திரிபால சிறிசேன யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .