2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீடு உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஜனவரி 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு, தெற்கு பிட்டிபனை தேவாலயத்துக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த வீடொன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசிகள் செவ்வாய்க்கிழமை (20) காலை  ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இவ்வீட்டில் வசித்து வந்த குடும்பம் ஒன்று நிர்க்கதியாக்கப்பட்டமையை அடுத்து, நீர்கொழும்பு மாநகர மேயர் அன்டனி ஜயவீரவுக்கு எதிராக  இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டுரிமையாளர்  பிரான்சிஸ் சேவியர் தெரிவிக்கையில்,

'எனது வீடு மற்றும் கடை அமைந்துள்ள காணி, பிட்டிபனை தேவாலயத்துக்கு சொந்தமானது. இந்தக் காணியில் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக  நாங்கள் வசித்து வருகிறோம்.

நான் 18 வருட காலமாக  எனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறேன். இந்தக் காணி பிட்டிபனை தேவாலயத்துக்கு சொந்தமானது என்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால், 4762ஆம் இலக்க சட்டத்துக்கமைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாங்கள் இங்கு வீடு அமைத்து வாழ்வதுக்கு, பிட்டிபனை தேவாலயத்தின் அருட்தந்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும், நேற்று திங்கட்கிழமை (19) முற்பகல் 10.30 மணியளவில் கனரக வாகனங்களை கொண்டு, எமது எதிர்ப்பையும் மீறி எனது வீடும் கடையும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது.

எமது வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்றால், பிட்டிபனை பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இதுபோன்று உள்ளன. நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளர் என்ற காரணத்தினாலேயே மேயர் இந்த நடவடிக்கையை எடுத்தார்' என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில்,  நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீரவிடம் நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் கயான் பெர்னாந்து சம்பவ இடத்திலிருந்து கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வினவிய போது,

'முன்னாள் மேயர் ஹேர்மன் குரேராவுக்கு, பிரதேசவாசிகளால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக தனது தலையீடு எதுவும் இல்லை' என தற்போதைய மேயர் அன்டனி ஜயவீர தெரிவித்தார்.

அத்துடன், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே குறித்த வீடும் கடையும் உடைக்கப்பட்டதென அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீர்கொழும்பு பொலிஸார், வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்களை அங்கிருந்து அகற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .