2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கொழும்பு நகரில் ஆசிரியர்களை உருவாக்குவது அத்தியாவசியம்

Princiya Dixci   / 2016 மே 02 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர் கல்வி வலயத்துக்குள்ளே வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொறியியலாளர்கள் உருவாக்கத்தின் தேவையை விட ஆசிரியர்களை உருவாக்குவது அத்தியாவசியமாக மாறியிருக்கின்றது. இதனை நாம் செய்யாவிடின் எமது சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்தார்.

கொம்பனி தெரு மதரஸா ஒன்றின் வருடாந்த மீலாத் தின நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

கொழும்பிலே 70 வீதமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால், அவர்களிடம் கல்வித் தகைமைகள் இல்லாமல் காணப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் பாடசாலைகளில் உள்ள சில குறைப்பாடுகளாகும். இவற்றை நிவர்த்திசெய்ய எதிர்க்காலத்தில் நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுங்கவுள்ளோம். அதற்கு கொழும்பு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. மக்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன். 

கொழும்பு நகருக்குள்தான் நாட்டிலுள்ள முன்னணிப் பாடசாலைகள் காணப்படுகின்றன. அந்த பிரபல தேசிய பாடசாலைகளில் எமது பிள்ளைகளுக்கு இடம் கிடைப்பதில்லை. வெளி மாணவர்களே அவற்றில் கற்கின்றனர். எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் சிறந்த தரத்தில் இருப்பதாக அவதானிக்க முடியவில்லை. இந்நிலையில் சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இதனால் எமது மாணவர்கள் இங்குள்ள மாகாண பாடசாலைகளிலேயே கற்றவேண்டிய நிலை காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கொழும்பு நகருக்குள் கற்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கொழும்புக்கு வெளியிலிருந்தே அழைத்தெடுக்க வேண்டியிருக்கின்றது. 

அவர்கள் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஓரிரு வருடங்கள் இங்கு கடமையாற்றிவிட்டு பின்னர், அரசியல்வாதிகளைப் பிடித்துக்கொண்டு சொந்த இங்களுக்குச் சென்று விடுகின்றனர். அத்துடன், எமது பாடசாலைகளிலுள்ள சிங்கள மொழிப் பிரிவுகளில் கற்பிக்க சிங்கள ஆசிரியர்கள் வருவதில்லை. அவர்களுக்கும் நடைமுறையில் பல சிக்கல் இருப்பதனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வருவதற்கு அவர்களும் விரும்புவதில்லை. இதனால் இங்கு பாரியளவில் ஆசிரியர் தட்டுப்பாடொன்று காணப்படுகின்றது. 

நாங்கள் வெளி பிரதேச ஆசிரியர்களை இனிமேலும் நம்பியிருக்க முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறு நம்பியதனால் பாரியளவில் கல்வித் தகைமையற்ற சந்ததியொன்றை உருவாகியுள்ளது. இனிமேலும் எதிர்கால சந்ததியினரையும் எம்மால் பலிக்கடாக்கலாக்க முடியாது. அவர்கள் காப்பாற்றப்படவேண்டும். எமக்கு இன்று வைத்தியர்களோ, சட்டத்தரணிகளோ, பொறியிலாளர்களோ தேவையில்லை. ஆசிரியர்களே தேவை. அவற்றை நாமே உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது சமூகத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .