2026 மார்ச் 18, புதன்கிழமை

போலிக் கடவுச்சீட்டை தயாரித்த இருவருக்குப் பிணை

Thipaan   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

போலிக் கடவுச்சீட்டை தயாரித்து சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றபோது கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவரை தலா 7,500 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் இரண்டு நபர்களின்  சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் திலகரத்ன பண்டார கடந்த வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான சவூதி நாட்டவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமே  விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளார். இவரது கடவுச் சீட்டு நீதமின்ற பாதுகாப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிணை வழங்க உத்தரவிடப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்த முஹம்மத் அஸ்மி, சித்தி சர்மிளா ஆகியோராவார். இவர்களுடன் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரான சித்தி சர்மிளாவின் கணவரான சவூதி நாட்டவராவார். முஹம்மத் அஸ்மி என்ற சந்தேக நபர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் பணியாற்றுபவராவார்.

சந்தேக நபர்கள் மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை (15) வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே சவூதி நாட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் போலிக் கடவுச் சீட்டைத் தயாரித்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு பெண்களை பணிப்பெண் வேலைக்கு  அனுப்பி வந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை  அடுத்து விமான நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகள் சந்தேக நபர்களை இரவு கைது செய்துள்ளனர். 

தம்மால் தயாரிக்கப்பட்ட போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பெண்கள் சிலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக வந்த போதே விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் சார்பில் சட்டத்தரணி எம்.பி.எம். மாஹிர் மன்றில் ஆஜரானார். இந்த வழக்கு  டிசெம்பர் மாதம்  11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X