2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கைப்பணி உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் கைப்பணி உற்பத்திக் கிராமங்களை உருவாக்குதல் மற்றும் பலப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 100 மில்லியன் ரூபா நிதி திறைசேரி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு முன்னெடுப்புகள் தொடர்பாக அறிவிக்கும் மாநாடு திங்கட்கிழமை (24) கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அரச தகவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யாழ்ப்பாணத்தில் மாசியப்பிட்டி, மட்டக்களப்பில் தாழங்குடா உட்பட நாட்டின் ஏனைய வளம் சார் பகுதிகளில் பல்வேறு கைப்பணி உற்பத்திக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்திய அரசு இரண்டு கைப்பணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக் கிராமங்களை உருவாக்க முன்வந்துள்ளது. இதில் ஒரு கிராமம் யாழ்ப்பாணம் கைதடியிலும் இரண்டாவது கிராமம் ஹம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரவிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேலும் பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கான மூலப்பொருட்களை இலகுவாகவும் நியாய விலையிலும் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக, தற்போது செம்பு, ஈயம், பித்தளை, அலுமினியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் ஏற்றுமதிகள் தடைசெய்யப்பட்டு, அவை இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை முலம் கொள்வனவு செய்யப்பட்டு தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டுவரும் 18 கைத்தொழில் பேட்டைகளின் மேம்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.

கைத்தொழில் பேட்டையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 305 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் தற்போது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களினது நிதி உதவிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமான வசதிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன.

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளை தரமுயர்த்துதல் மற்றும் விரிவாக்கல் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உந்து சக்தியாக இந்திய அரசாங்கம் புதிய இயந்திரங்களை குருநகர் வலை உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதேபோல் லுணுவில மற்றும் வீரவில நிறுவனங்களும் தற்போது பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

பனை மற்றும் கித்துள் சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்துறை சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு உபகரணங்கள், பாதுகாப்பு அங்கிகள், தொழிற்துறையை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டைகள், காப்புறுதி வசதிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் இவ் உற்பத்திகளின் சந்தை வாய்ப்பு வசதிகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .