2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் சிறு குற்றம் புரிந்த 175 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் சிறு குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும்  175 பேரை கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர்  டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்செயல்களின் பிரகாரம்,

யாழ். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 29 பேரையும் அடித்துக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 23 பேரையும் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும்  37 பேரையும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும்  15 பேரையும் திருடியதாகக் கூறப்படும் 05 பேரையும் வீதி விபத்திற்கு காரணமானதாகக் கூறப்படும்  ஒருவரையும் சூழல் மாசடைதலுக்கு காரணமானதாகக் கூறப்படும் 02 பேரையும் பொதுவிடத்தில் மது அருந்தியதாகக் கூறப்படும்  02 பேரையும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்ததாகக் கூறப்படும்  ஒருவரையும் சொத்துக்கு  சேதமேற்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரையும் பாரிய குற்றம் புரிந்ததாகக் கூறப்படும்  03 பேரையும்  சிறு குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் 07 பேரையும் ஏனைய குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும்; 49 பேரையுமாக  175 பேர் கைதுசெய்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் கடந்த வாரம் இடம்பெற்ற 06 கொள்ளைச் சம்பவங்களில் 52,91,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும்; அவர் கூறினார்.

யாழ். ஓட்டுமடம் சந்தியிலுள்ள வியாபார நிலையமொன்றின் முன்கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 3,50,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக நவாலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் கடந்த 20ஆம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதுடன், புலன் விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

 யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் 14,12,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் கொள்ளையிடப்பட்டதாக  கடந்த 30ஆம் திகதி பாதிக்கப்பட்ட நபரால் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அதன் பிரகாரம், பூங்கா வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து,

நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தியதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

யாழ். அபுபக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் பட்டப்பகலில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 16,600 ரூபா பெறுமதியான வீட்டு உடைமைகளை கொள்ளையிட்டதாக  கடந்த 02ஆம் திகதி வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்ததாகவும் இது சம்பந்தமான புலன் விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

யாழ். பலாலி வீதியில் கடந்த 05ஆம் திகதி 12,00,500 ரூபா பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக இராஜ வீதி கோப்பாயை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார்.

அத்துடன், கோப்பாய் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் முன் கதவினை உடைத்து 14,00,900 ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக  ஊரெழு மேற்கு சுன்னாகத்தை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும்  அவர் கூறினார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பகுதியிலுள்ள வீடொன்றின் முன் கதவினை உடைத்து சுமார் 6,05,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக  இளவாலையை சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பகுதியிலுள்ள வீட்டில் 11,000 ரூபா பெறுமதியான புடைவையும் 5000 பணமும் சாவகச்சேரி, கச்சாய் வீதியிலுள்ள வீட்டில் 40,000 ரூபா பெறுமதியான மோட்டார், சாவகச்சேரி ஐயா கடைக்கு முன்னால் இருந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு 1,80,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

அத்துடன், மானிப்பாயிலுள்ள வீட்டில் அத்துமீறி நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 70,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த திருட்டுகள் சம்பந்தமான புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டி பொலிஸ் பகுதியில் 35,01,385 ரூபா பெறுமதியான காசோலை மோசடிகள் சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளபோதிலும், இது தொடர்பில்  யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லையெனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஸ்ரான்லி வீதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30ஆம் திகதி செய்த முறைப்பாட்டில் 2,13,985 ரூபா பெறுமதியான காசோலையை கொடுத்து ஒருவர் மோசடி செய்துள்ளதாக முறையிட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

குப்பிளான் ஏழாலை வடக்கை சேர்ந்த ஒருவர் கடந்த முதலாம் திகதி 12,75,000 ரூபா பெறுமதியான காசோலையை கொடுத்து ஒருவர் மோசடி செய்ததாக முறையிட்டதாகவும் அவர் கூறினார்.

கல்வியங்காடு, கோப்பாயை சேர்ந்த மற்றுமொருவர் கடந்த முதலாம் திகதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கொடுத்து ஒருவரை மோசடி செய்துள்ளதாக முறையிட்டதாகவும் அவர் கூறினார்;.

கண்டி வீதி கச்சேரியை சேர்ந்த ஒருவர் கடந்த ஐந்தாம் திகதி 2,62,400 ரூபா பெறுமதியான காசோலையை கொடுத்து ஒருவரை மோசடி செய்துள்ளதாக முறையிட்டதாகவும் அவர் கூறினார்.

யாழ். ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த டிசெம்பர் மாதம் செய்த   முறைப்பாட்டில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை கொடுத்து ஒருவரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் 2,50,000 ரூபா பெறுமதியான காசோலையை ஒருவர் கொடுத்து மோசடி செய்துள்ளதாக வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கடந்த 2ஆம் திகதி முறையிட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த காசோலை மோசடிகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான புலன் விசாரனைகள் பொலிஸாரால் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .