2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆம் நாள் நிகழ்வுகள்

Kogilavani   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆம் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றன.

கிளிநொச்சி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிரான செயற்;பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் வாரமாக நாடு முழுவதும் இவ்வருடம் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

வடகிழக்கில் பணிபுரியும் பெண்கள்; செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் வடகிழக்கிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்தி பவனிகள், வீதி நாடகங்கள் மற்றும் கருத்துரைகள் என்பன நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பாலியல் பலாத்காரம் சார்ந்த விடயங்களை தாங்கிய விழிப்புணர்வு ஊர்தி ஒன்று கடந்த 4 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தை நேற்று வந்தடைந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்தியில் சுமார் 100 வரையிலான பெண்கள் பங்குகொண்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இதன்போது ரூபவதி கேதீஸ்வரன் கூறுகையில்,

'பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக இவ்வாரான தெரு நாடகங்கள் சமூகத்திற்கு நல்ல செய்தியைச் சொல்கின்றன. எமது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியைத் தட்டிக் கேட்கின்ற செய்திகளை வழங்கும் இது போன்ற ஊர்திகள் காலத்தின் தேவையாக உள்ளன.

பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு பெண்கள் மட்டுமல்ல எல்லோருமே போராட வேண்டும்' என தெரிவித்தார்.

மகஜரைக் கையேற்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் மாசிலாமணி ஜெயராஜா, மனித உரிமைகள் சட்டத்தரணி சதீஸ்குமார் விஜயராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி ஊர்தியானது யாழ்.மாவட்டத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .