2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 37பேருக்கும் விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, எஸ்.றொசேரியன் லெம்பேட்


யாழ். எழுவைதீவு மற்றும் தலைமன்னார் ஆகிய கடற்பரப்புக்களில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

யாழ். எழுவைதீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான்  எம்.எஸ்.மகேந்திரராஜா உத்தரவிட்டார்.
 
புதுக்கோட்டை, ஜனதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் 4 படகுகளுடன் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களும் அவர்களது படகுகளும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன்,  நீரியல் வளத்துறையினர் குறித்த 15 மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இவர்களை எதிர்வரும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், 4 படகுகளையும் காரைநகர் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன்போது, மேற்படி 22 மீனவர்களும் தலைமன்னார் கடற்பரப்பில் இருந்து 10 கடல் மையில் தொலைவில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தலைமன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான், குறித்த மீனவர்களை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் 5 பேர் சுகவீனமுற்று இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து இவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சைக்கான உதவிகளை வழங்குமாறு பதில் நீதவான் அறிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .