2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் 2 வாரங்களில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம்: அமைச்சர்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 5 தொழில் வழங்குநர்கள் (முதலீட்டாளர்கள்) எதிர்வரும் இரண்டு வாரங்களில் தங்கள் இடங்கள் அடையாளப்படுத்த்தி அவ்விடங்களில் தங்கள் தொழில் முயற்சிகளைத் தொடங்குவற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழிற்பேட்டைகளினது தொழிற்துறை நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்றது. 

இதன்போது, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினை முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 தொழில் வழங்குநர்களுக்கு வழங்குவதாக டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முதலீட்டாளர்களுக்கு தேவையான காணிப்பங்கீடுகள், காணிகளின் அளவீடுகள் மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு, அமைச்சரும் கைத்தொழிற்பேட்டையின் தெரிவு செய்யப்பட்ட 5 முதலீட்டாளர்களும் அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டைக்குச் நேற்று சென்று ஆராய்ந்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில்,

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டை ஆரம்பிக்கப்பட்டதும், அப்பிரதேசத்தின் நிலத்தடி நீரினைப் பாதுகாத்தல், கைத்தொழிற்பேட்டைக்குத் தேவையான நீர் மற்றும் தொழிற்பேட்டையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதிலிருந்து தடுத்தல், சீமெந்திலான கழிவுநீரை தொட்டியொன்றில் சேமித்து அதனை வடிகட்டி பயன்படுத்துவது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும் தொழிற்பேட்டை வளாகத்தில் மழைநீரைச் சேகரிப்பதன் ஊடாக தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு அதனை பயன்படுத்துவது மற்றும் தொழிற்பேட்டையையும் அதன் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், முதலீட்டாளர்களது தேவைகள், பிரச்சினைகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

'தொழிற்பேட்டை வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகளை நாட்டுவதுடன் வளாகத்தை அழகுபடுத்துவது அவசியம். அந்த வகையில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் ஜீவபாபு, டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.விகுகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .