2025 ஜூன் 25, புதன்கிழமை

மக்களின் தவறால் மாகாண நிர்வாகம் கிடைக்கவில்லை: டக்ளஸ்

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருபவர்கள் நாம். எனினும் எமது மக்களின் தவறான தெரிவால் மாகாண சபை நிர்வாகம் எமக்குக் கிட்டவில்லை என்று பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் அமைந்திருக்கும் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவான அனலைதீவிற்கு சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் 24 மணிநேர மின்சார விநியோகத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனலைதீ பின்தங்கிய பிரதேசமாகவே இருக்கின்றது.இத்தீவிற்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட தேவைகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அனலைதீவின் நீண்டகால எதிர்பார்ப்புக்களில் ஒன்று இன்றைய தினம் பூர்த்தியாகியுள்ளது. என்றாலும் இங்குள்ள சில பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இத்தேவை பூர்த்தி செய்யப்படாதிருப்பினும் இது வெகுவிரைவில் பூர்த்தி செய்யப்படும்.

1991 ஆம் ஆண்டு நான் இங்கு வந்திருந்த போது இப்பகுதி மக்கள் மிகவும் கஷ;டமானதொரு நிலையில் வாழ்ந்து வந்தனர். உண்பதற்கு உணவுகூட இல்லாததொரு நிலை இங்கிருந்தது. இன்று அந்த நிலை படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி போதுமானதாக இல்லை. இன்னும் முன்னேற்றம் வேண்டும். அந்த முன்னேற்றத்தை உங்களுக்கு உருவாக்கித் தருவதற்கே நாம் அன்றும், இன்றும் உங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டே உழைத்து வருகின்றோம். 

மாகாணசபை எம்வசம் கிடைத்திருப்பின் இப்பகுதிகள் மேலும் மேலும் துரித முன்னேற்றம் கண்டிருக்கும். இருப்பினும் உங்களுக்கான எமது பணிகள் முடங்கிப் போய்விடவில்லை. தற்போது எமக்கிருக்கும் பலத்தைக் கொண்டு முடிந்தளவிற்கு நாம் உழைத்து வருகின்றோம்.

அந்தவகையில் எங்கள் வசம் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நெடுந்தீவு,வேலனைமற்றும் ஊர்காவற்றுறை மூன்று பிரதேச சபைகளுக்குமென தலா 100 மில்லியன் ரூபா வீதம் நாம் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றிருக்கிறோம்.

அதில் 20 மில்லியன் ரூபா அனலைதீவிற்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் வீதிகளைப் புனரமைப்பதற்கும், கடைத்தொகுதியினை அமைப்பதற்கும், புதிய அம்புலன்ஸ் படகு கொள்வனவு செய்வதற்கும் இன்னும் சில அபிவிருத்தித் தேவைகளுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும். இதுமட்டுமல்லாது ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடி இவ்வருடமும் நிதியொதுக்கீடுகளைப் பெற்று இப்பகுதியின் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளேன்.

இந்த வகையில் இங்குள்ள மத, சமூகப் பெரியார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, இப்பகுதியின் தேவைகளை இனங்கண்டு அவை துரிதகதியில் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம், ஊர்காவற்துறை பிரதேச சபை பிரதி தவிசாளர் அல்பேட், யாழ்.மாவட்ட மின் அத்தியட்சகர் ஞானகணேசன், மின் அத்தியட்சகர் அருள்நாதன், மின்பொறியியலாளர் திருமதி கமலலோஜினி, உதவி மின் பொறியியலாளர் பவானந்தராஜா மற்றும் பிரதேச சபை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊர்காவற்துறை பிரதேச செயலர் உரை

இதேவேளை இந்த வைபவத்தில் ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன்யோகநாயகம் உரையாற்றுகையில்,
மக்கள் மீது அக்கறை கொண்டவரையே மக்கள் நம்ப வேண்டும். யாழ்.குடாநாட்டில் அமைந்திருக்கும் தீவுக்கூட்டத்தில் ஒரு தீவான எழுவைதீவிற்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கும் நிகழ்வு (15) எழுவைதீவில் நடைபெற்றது.  

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத்தில் மட்டுமல்லாது தீவகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருபவர். 

தீவகத்திலுள்ள அனைத்துப் பகுதிகளும் அமைச்சருக்கு நன்குதெரியும். ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் அவர் நன்கறிவார். பெயர் குறிப்பிட்ட பல பகுதிகளின் நிலைமைகளை அவர் என்னிடம் கேட்டறிந்து கொள்வதுண்டு.

மழைகாலமாகட்டும் அல்லது கோடைகாலமாகட்டும் அக்காலப் பகுதிகளுக்கேற்ப தீவகப் பகுதி மக்களின் நன்மைகருதி முன்னெடுக்கப்படக்கூடிய வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

அவரது இந்த அக்கறையை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். அந்தவகையில் இப்பகுதி மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அமைச்சரை இப்பகுதி மக்கள் நம்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .