2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 9 பேர் விடுதலை

Thipaan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.

அத்துடன், மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை தொடர்ந்து தடுத்து வைக்கும் படி நீதவான் பணிப்புரை விடுத்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே இந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் புதன்கிழமை (01) பருத்தித்துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்படவுள்ள மீனவர்கள் மற்றும் தலைமன்னார் மீனவர்கள் ஆகியோரை இலங்கை கடற்படையினர் ஊடாக எதிர்வரும் 3 அல்லது 4ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள, இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று (30) காலை, 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

இந்த மீனவர்களை யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .