2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழில் மீண்டும் துளிர்விடும் விவசாயம்

Menaka Mookandi   / 2011 மே 02 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூன்ற தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அரசாங்கமும் வெளிநாடுகளும் இணைந்து பாரிய திட்டங்களை வகுத்து வருகின்றன.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முடக்கிவிடப்பட்ட இந்த அபிவிருத்திப் பணிகள் மீளக் கட்டியெழுப்பப்படுவதன் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பொருளாதார நிலைமையும் கட்டியெழுப்பப்படும் என்ற பாரிய எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியிலேயே இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு இணையாக வடக்கு கிழக்கிலும் வறுமையை நிலையைப் போக்க வேண்டும், அதற்காக ஒவ்வொரு குடும்பத்தினதும் நலனையும் தனித்தனியே கருத்திற்கொண்டு இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்ற உண்மையாகும். இருப்பினும் இது எந்தளவில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குரியதே.

அதற்காக மக்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே வழங்குவதால் இந்த எதிர்பார்ப்பினை நிறைவு செய்ய முடியாது. அதற்கு அனைத்து தரப்பினரும் மக்களோடு மக்களாக இணைந்து பங்களிப்பினை நல்குவதன் மூலமே உரிய பிரதிபலனை அடைய முடியும்.

விவசாயம், மீன்பிடி, கல்வி, கலை, காலாசாரம் எனப் பல்வேறு துறைகளிலும் தனித்துவம் வாய்ந்த யாழ். குடாநாடு தற்போது இவ்வாறான பல அபிவிருத்திப் பணிகளை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கின்றது. இதில் பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் செல்வாக்கு செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விவசாய உற்பத்திகளில் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு யாழ்ப்பாண மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்ந்த காலம் - யுத்தம் காரணமாக மங்கிப்போய்க் கிடந்தது. ஆனால் தற்போது அந்த விவசாயம் மீண்டும் துளிர்விட்டு வருவதை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாதிருந்த நிலங்களில் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் மக்கள் அதனைச் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளதையும் காணமுடிகிறது.

ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் மீண்டும் பயிர்ச்செய்கைக்காகப் பதப்படுத்தப்பட்டுள்ளதையும் மரக்கறி வகைகளுடன் புகையிலைப் பயிர்ச்செய்கை அவற்றில் முக்கிய இடத்தை வகிப்பதையும் காணமுடிகிறது.

இது ஒருபுறமிருக்க, இராணுவத்தினரும் தமது பங்குக்கு விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளதை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

இராணுவத்தினரின் தேவைக்காக மாத்திரமன்றி பொதுமக்களுக்கு சாதாரண விலைகளில் மரக்கறிகளை விற்பனை செய்யும் பொருட்டு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விவசாயத் திட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இன்னமும் போதிய வருமானத்தை ஈட்டமுடியாதுள்ள பாமர மக்களுக்கு கைகொடுப்பதாகவே அமைகின்றது.

யாழ். பலாலி படைமுகாமில் இதற்கென அவர்களால் ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு சுமார் 100 ஏக்கர்களாகும். மரக்கறிகள், பழங்கள், தானியவகை மற்றும் கீரை வகைகள் மாத்திரமன்றி பண்ணைச் செய்கையிலும் அவர்கள் தற்களது பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.

விவசாய திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் இந்த விவசாயச் செய்கையின் மூலம் இராணுவத்தினர் மாத்திரமன்றி பொதுமக்களும் இதன்மூலம் நன்மையடைகின்றனர் என யாழ். படைத் தலைமையகம் தெரிவித்தது.

இந்த விவசாய நடவடிக்கைகளுக்கென சுமார் 300 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த இராணுவ வீரர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு விவசாயச் செய்கையொன்றும் புதிதான விடயமில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவர்கள் மிகவும் விருப்பத்துடனேயே இந்த விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களால் பயிரிடப்படும் உற்பத்திப் பொருட்களை குறைந்த விலையில் இராணுவத்தினர் தங்களது வீடுகளுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லப் பயன்படுவதுடன் பலாலி படை முகாமை அண்மித்த திருநெல்வேலி சந்தைக்கும் பெரும்பாலான உற்பத்திகள் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

சாதாரண விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் விலையிலும் பார்க்க இராணுவத்தினரால் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் குறைந்த விலைகளில் அங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும், ஆரம்பத்தில் 15 முதல் 20 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விவசாயச் செய்கை தற்போது இந்தளவுக்கு வியாபித்துள்ளமைக்கு இராணுவத்தினரின் பாரிய பங்களிப்பே முக்கிய காரணமாகிறது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பு தற்போது யாழ். குடாநாட்டின் அபிவிருத்திப் பணிகளிலும் வியாபித்திருப்பதை காணமுடிகிறது. இதே பங்களிப்பு மக்களின் நலன் தொடர்பிலும் உரிய தரப்பினர் காண்பிக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.

Pix By :- Kushan Pathiraja


 


 

 












You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X