Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 மே 05 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பான விவாதத்தில் மீண்டும் கலந்துகொண்டு உரையாற்றும் இந்தச் சந்தர்ப்பமானது, முடிவே இல்லாமல் தொடர்கின்ற ஒரு வழக்கு விசாரணையில் விவாதிப்பதைப் போன்றதொரு மனநிலையைத் தருகின்றது என அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் ஈ.பி.டி.பி. உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெவித்த அவர், 'நாம் ஒருபோதுமே அவசரகாலச் சட்டத்தை விரும்பியதில்லை. ஆனால், இதுவரை நாட்டில் நிலவியிருந்த சூழல் அவசரகாலச் சட்ட நீடிப்பை ஏதோ ஒரு வகையில் அனுமதித்திருக்கிறது. அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பான எமது தெளிவான நிலைப்பாட்டை நாம் பலதடவை இந்த மன்றில் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
முழுமையான அமைதியும், நிறைவான ஜனநாயக மலர்ச்சியும் ஏற்படும்போது அவசரகாலச் சட்டம் என்பதே இல்லாமல் போய்விடும். இந்த இரண்டு முக்கிய விடயங்களும் வளர்ச்சியடையும் போது அவசரகாலச் சட்ட நீடிப்புக்கே அவசியமற்றுவிடும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளோம்.
அதேவேளை முழுமையான அமைதிக்கும் நிறைவான ஜனநாயத்துக்குமாக நாம் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால், சிந்திக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறோம். அமைதிக்கு எதிராகச் சிந்தித்துக் கொண்டு அவசர காலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. இதனை இந்த மன்றிலே மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, அவரசகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எமது கட்சியாகிய ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி) தன்னுடைய நிலைப்பாட்டை கடந்த வாரம் அரசாங்கத் தரப்புப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் தெளிவாக விளக்கியுள்ளது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காரணத்தினால், அவசரகாலச் சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான காலவரையறை ஒன்றை வகுத்துச் செயற்படுவது அவசியம் என்பதே எமது கோரிக்கையாகும். இதுவே நடைமுறைச்சாத்தியமானது.
நாம் அரசாங்கத்தில் முக்கியமான அங்கத்தை வகித்துக் கொண்டிருக்கின்றபோதும், தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வருகின்றோம். அத்துடன், அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதிப்பாட்டுடனும் இருக்கின்றோம்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதுடன் நீண்ட காலமாக அரசியல் காரணங்களுக்காகச் சிறைகளிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றோம்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுவிக்கப்படுவர் என்று சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு – புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை நாம்; வரவேற்கின்றோம். முடிந்தால் இந்த விடுதலையை இன்னும் விரைவுபடுத்தினால் நல்லது என்று கருதுகின்றோம்.
இதேவேளை இதுவரையில் 6,528 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4,092 பேர் மட்டுமே விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இவர்களில் மேலும் 500 பேர் அடுத்து வருகின்ற 'வெசாக்' பண்டிகைக் காலத்தில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இவ்வாறான விடுதலைகளும், வடக்குக் கிழக்கில் உருவாகி வருகின்ற இயல்பு நிலையும் தமிழ் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நம்பிக்கையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு அங்கே நிலவுகின்ற குறைபாடுகளை நீக்குவதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் விசேட திட்டமொன்றை உருவாக்கிச் செயற்படவேண்டும்.
நீண்ட காலமாகப் போர் நடைபெற்ற பிரதேசம் என்பதாலும், இதன்காரணமாக சிவில் நிர்வாக நடைமுறைகள் பலவீனமாகி இருந்த பகுதிகள் என்பதாலும் இந்தச் சிறப்பு நடவடிக்கை அங்கே அவசியமாக உள்ளது. முக்கியமாக, சிவில் நடைமுறைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்படவேண்டிய அறிவும், ஒழுங்குகளும் வளர்த்தெடுக்கப்படவேண்டியுள்ளது.
அத்துடன் காணி விவகாரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், வளங்களைப் பேணுதல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பான நடைமுறைகளை உருவாக்க வேண்டியிருக்கின்றது.
இதைவிட போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்திக்க வேண்டிய அவசியமும் அங்கே உள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் போரின் காரணமாக உடல் உறுப்புக்களை இழந்திருக்கின்றனர். இவர்களில் சிறு குழந்தைகள் முதல் பெண்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், முதியோர்கள் எனப் பல வகையிலும் அடங்குகின்றனர்.
ஆகவே, இவர்களைப் பராமரிப்பதற்கும், இவர்களுக்கான நிரந்தர உதவிக்குமாக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். போர் நடைபெற்ற நாடுகள் அனைத்திலும் இவ்வாறான பிரச்சினைகளை அந்தந்த நாடுகள் எதிர்கொண்டுள்ளன. ஆகவே, நாமும் இதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
இதைவிட, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளின் விபரங்களை அவர்களுடைய பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் அவ்வாறானவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். மேலும், வடக்குக் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல அவசர உதவிப்பணிகளுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்களிடமிருந்து பங்களிப்புக்களைப் பெறவேண்டியுள்ளது. அதற்குரிய சூழல் ஒன்று மிக அவசியமாக உருவாக்கப்பட வேண்டும்.
இந்த மக்கள் இங்கே உள்ள தங்கள் நகரங்களை அபிவிருத்தி செய்ய விரும்புகிறார்கள். தங்கள் ஊர்களையும் தங்களுடைய உறவுகளையும் மேம்படுத்த விரும்புகிறார்கள். இதற்கு புலம் பெயர்ந்த மக்கள் முதலீடுகளைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். மேலும் - கலாச்சார உறவுப் பரிவர்த்தனையை இலகுவாக மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.
போரின் காரணமாக தோட்டங்களை இழந்துள்ள மக்களே வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ளனர். இவர்களில் பலருக்கு உழைப்போ வேறு வருமானங்களோ இல்லை. ஆகையால் இந்தப் பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போருக்குப் பின்னரான அமைதிக்காலத்தில், போரை வெற்றிகொண்ட அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றனர்.
மக்களின் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதென்பது மிகவும் அவசியமானது. இன்று நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான கடமையாகவும் இதனையே நான் கருதுகிறேன். போர்க் காலத்திற்கும் போருக்குப் பின்னான காலத்திற்கும் இடையில் வேறுபாடுகள் தெரிய வேண்டும்.
இந்த வித்தியாசத்தை உணர வைப்பதில் நாம் முக்கியமான பங்களிக்க வேண்டும். அதற்கான திட்டமிடலும் செயற்பாடும் அவசியமானது என்பதே நான் இங்கே கவனப்படுத்த செய்யும் சங்கதியாகும்.
நாம் கடந்த காலத்தில் அரசிடம் வலியுறுத்தி வந்த விடயங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இந்த மன்றிலே தெரியப்படுத்துகின்றேன். அதற்காக நாம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் படைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முக்கியமாக, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்தமையும், புனர்வாழ்வு முகாமிலிருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுவிப்பதையும் நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.
எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் அதை நிறைவேற்றி வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களிடத்தில் நல்லதொரு புரிதலை ஏற்படுத்தி உள்ளது.
அபிவிருத்தியை நோக்கியும் அமைதியை நோக்கியும் முன்னேறிச் செல்லும் எமது நாட்டை நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்ய வேண்டுமானால், எமது வளர்ச்சிக்கும் -அமைதிக்கும் தடையாக இருக்கின்ற காரணிகளை நாம் இனங்கண்டு நீக்க வேண்டும்.
இதில் முக்கியமானது இனமுரண்பாடாகும். இன்று உலகில் பல்லின - பல்மத - பல்சமூக இணக்க நிலைமைகள் வலுப்பெற்று வருகின்றன. விட்டுக்கொடுப்பதும், சேர்ந்திருப்பதும், ஏற்றுக்கொள்வதும் சமமாக மதித்தலும் உயரிய ஜனநாயக நடைமுறைகளாக பின்பற்றப்படுகின்றன.
ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் வலுவிழந்து வருகின்றன. உலகத்தின் நிகழ்ச்சிப் போக்கு மாறிவிட்டது. அதி தீவிரமான நிலைப்பாட்டையுடைய எந்தகைய அரசியல் வழிமுறையும் வெற்றியடைய முடியாது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் பலவும் எமக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
ஆகவே நாம் நடைமுறைகளுக்குச் சாத்தியமானவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நீதியைப் பின்பற்றி, அமைதியை உருவாக்குவதற்கு முயற்சிப்போம். அவசரகாலச் சட்டத்தை மட்டுமல்ல, இந்த நாட்டிலே மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கடியைத் தருகின்ற அனைத்து விவகாரங்களையும் நீக்குவோம்.
இதற்கு அனைவருடைய பங்களிப்பையும் எதிர்பார்த்திருக்கிறது இந்த நாடு. வவுனியா நகரசபை விவகாரம் தொடர்பாக இந்த அவையில் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .