2025 ஜூன் 21, சனிக்கிழமை

இராணுவ புலனாய்வாளர்களே நல்லூர் பிரதேச சபை தவிசாளரை தாக்கினர்: மாவை எம்.பி

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்ட விடயத்தில் இராணுவத்தின் புலனாய்வாளர்களும், ஆதரவாளர்களும் தொடர்புபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமில்லாது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்; மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ். மாவட்டத்தின் உள்ள சகல பிரதேச சபைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார். அவரை விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு உரிமை இல்லை.

பொலிஸ் விசாரணை முடித்து வீடு திரும்பும்போது இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களை இனங்காட்ட முடியாத அளவிற்கு மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்கள். இத்தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

சிறுவர் பூங்கா அமைப்பதற்கு திட்டமிட்டு பூங்கா அமைப்பதற்குரிய காணியை இராணுவத்தினர் ஆக்கிரம்பிதற்கு எடுத்த நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டமைக்கும் பின்னணியில் இராணுவத்தினர் இருப்பதற்கான சந்தேகம் ஆழமாகவும், பலமாகவும் இருக்கின்றது.

போர் காலம் முடிந்த பின்னர் இவ்க்வாறான சம்பவங்கள் பல இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது மறைக்க முடியாத ஒரு விடயம்.

இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகளை மக்கள் குடியிருப்புக்களை மேற்கொள்ளவதற்கு கதைக்கும் போதும், ஜனாதிபதி நெருக்கடிகள் ஏற்படும் போதும் இராணுவத்தினர் 60 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார். ஆனால், சீன நாட்டின் உதிவயுடன் பல்வேறு இடங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் வெளிப்பாடாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்டட்டுள்ளார். எங்களின் போராட்டத்தின் விளைவாக ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன பிரச்சினைக்கு தீர்வு கான வேண்டும், இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வட பகுதியில்  இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்கம் மதிப்பு கொடுக்கவில்லை.

இராணுவ ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் செலுத்தப்பட்டு வருகின்றது. மக்களின் அன்றாட வாழ்விலும், தேர்தல் காலங்களிலும், நிர்வாக துறைகளிலும் இராணுவ ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.

பிரதேச செயலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. பிரதேச சபை தலைவர்கள் தாக்கப்படுகின்றார்கள். ஜனநாயக உரிமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

இவ்வாறான தாக்குதல்களுக்கும், காணி அபகரிப்புக்கும் எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .