2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனப் போராட்டம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)


யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அரைநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர்.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியில் இராணுத்தினர் நுழைந்தமை ஆகியவற்றைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

'பல்கலைக்கழக  விடுதிகளுக்குள் நுழைந்ததைக் கண்டிக்கின்றோம்' 'பல்கலைக்கழக வளாகத்தினுள் படையினரின் அடாவடித்தனம்' 'தமிழர்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கு தீபமேற்றத் தடையா?' 'இது தான் ஜனநாயகமா' 'பெண்கள் விடுதிக்குள் இரவு நேரத்தில் அனுமதியின்றி இராணுவம் அத்துமீறலா?' போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ராஜகுமாரன் கூறுகையில்,

'பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் அத்துமிறி நுழைவது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறுமாக இருந்தால் நாங்கள் எங்கள் போராட்டதை வலுப்படுத்த நேரிடும்.

பல்கலைக்கழக விடுதிகளுக்குள் படையினர் அத்துமீறி நுழைந்தது கண்டிக்கத்தக்க விடயமாகும். இறந்து போன எங்கள் உறவுகளுக்காக நாங்கள் தீபமேற்றுவதற்கு படையினரும் பொலிஸாரும்  தடை செய்துள்ளனர். இது அடிப்படை மனித உரிமையை மீறுகின்ற செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் எடுத்துக்காட்டுவதற்காகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின்னரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழ் மக்கள் அடிமைகளாக ஒரு அடக்கு முறைக்குள் இருப்பதை இவ்வாறான சம்பவங்கள் வெளிப்படுத்தி நிக்கின்றது' என்றார்.
\



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .