2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மாணவர்களின் கைதினை எதிர்த்து யாழ். நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்தும், பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினரின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்தும் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ். பஸ் நிலையத்தில் இன்று காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை சுமார் 1 மணித்தியாலயம் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து, ஒன்றிணைந்து - கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும், பல்கலை மாணவர்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸாரின் அடாவடித்தனத்தினையும் உடனே நிறுத்தக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “விடுதலை செய் விடுதலை செய்... மாணவர்களை விடுதலை செய்”, “அடிக்காதே அடிக்காதே... மாணவர்களை அடிக்காதே”, “நுழையாதே நுழையாதே... பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையாதே”, “தாக்காதே தாக்காதே... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களை தாக்காதே”, “ஜனநாயக உரிமைகளை மிதிக்காதே” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய விலியுறுத்தி வெளியிடப்பட்ட மகஜரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் நவநீதம்பிள்ளை மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் தேசிய மக்கள் முண்னணியினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .