2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் அதிகார பரவலாக்கம் இல்லை; ஐ.நா குழுவினரிடம் சிவில் சமூகம் எடுத்துரைப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யப்பான், நைஜீரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான வதிவிடப் பிரதிநிதிகள், இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவை சந்தித்து கலந்துரையாடினர்.

நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டும் முகமாக பல்வேறு தர்பினரையும் சந்தித்து கலந்துரையாடும் நோக்கத்துடனேயே யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த மேற்படி குழுவினர், சமாதானத்தினை பின்பற்றுவதற்கு எவ்வகையான செயற்திட்டங்களை மேற்கொள்ளலாம் என்று சிவில் சமூகத்தினரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சிவில் சமூகத்தினர், 'நாட்டில், அதிகார பரவலுக்காக போராடிய மக்களுக்கு அதை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிகார பகிர்வுக்காக போராடாத மக்கள் அதனை அனுபவிக்கின்றார்கள்.

நாட்டில் சமாதானத்தினை வலியுறுத்த அனைவரும் ஒரே விதமாக கணிக்கப்படுவார்களாயின், அங்கு சமாதானம் வருவதற்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் இங்கு அந்த நடைமுறை இல்லை என்பதுடன், மொழி ஒருமிதப்பட்டு செயற்படுத்தப்படவில்லை' என்று விளக்கினர்.

அத்துடன், 'சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும். அது சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. நல்லிணக்கத்தினை பெறுவதற்கு தடையாக இருக்கும் குறைபாடுகளுக்கு உரிய பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படுமாயின் நல்லிணக்கமும் சமாதானமும், எந்தவொரு தடைமின்றி தனித்துவம் கிடைக்கும். ஆனாலும், தனித்துவம் பேணுவதற்கு தடையாக இருக்கக்கூடாது' என்றும் கூறினர்.

'யாழ். மாவட்டத்தில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்படுகின்றது. இதனால் மக்களிடையே சமாதானமும் நல்லெண்ணமும் அற்றுப்போய்விட்டது. அதுவும் மக்களிடையே சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு இது தடையாகவே இருக்கின்றது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாழில் தடை விதிக்கப்படுகின்றது.

ஆனால் தென் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த எந்த தடையும் விதிப்பதில்லை, யாழிலும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி தரவேண்டும். யாழில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சினைகளை பார்க்கப்போனால் மக்களிடையே சமாதானம் இல்லை. அதனை இன விகிதாசார அடிப்படையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

மக்களிடையே மீள் இணக்கம் கொண்டுவருவதற்கு, அடிப்படையில் இருக்கும் கட்டமைப்பினை மாற்ற வேண்டும். தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற மீள் இணக்க மாதிரியை இங்கு பின்பற்ற முடியாது.

இங்குள்ள கட்டமைப்பு அடிமைப்படுத்தும் கட்டமைப்பு. அக்கட்டமைப்புக்கள் மாற்றப்பட வேண்டும். அதேவேளை, விட்டுக் கொடுப்புகளும் இங்கில்லை. மக்களுக்கு சமாதானத்தினையும், அமைதியையும் பெற்றுக் கொடுக்க சில நடைமுறை செயற்திட்டங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இக்கலந்துரையாடலில், சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவின் தலைவர் பொன். பாலசுந்தரம் பிள்ளை, செயலாளர் பரமநாதன் மற்றும் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ். மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .