2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் வருகையில் வீழ்ச்சி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 08 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் வர்த்தக இளமானி வகுப்புக்கான விரிவுரைகள் மாத்திரமே இன்றைய தினம் இடம்பெற்றதாகவும் ஏனைய வகுப்புகளுக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்து, சில மணிநேரங்களின் பின்னர் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 60 சதவீதமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இதனால், பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. இந்நிலையில், இன்றைய தின விரிவுரைகளில் சுமார் 20 சதவீதமான மாணவர்களே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்புக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சில பீடங்களின் பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .