2025 ஜூன் 18, புதன்கிழமை

வன்னேரிகுளம் பிரதேசம் உவர்நீராவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


கிளிநொச்சி, வன்னேரிக்குளமும் மற்;றும் அதனை அண்டிய பிரதேசங்களும் படிப்படியாக உவர்பிரதேசமாக மாற்றமடைந்து வருவதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அந்த கலந்தரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பழைய குடியிருப்புகளில் ஒன்றான வன்னேரிக்குளம் பிரதேசத்தின் பல பகுதிகள் படிப்படியாக உவர் பிரதேசமாக மாற்றமடைந்துள்ளன. இதனால் குடிநீர் உவராக மாற்றமடைந்ததோடு தென்னை உள்ளிட்ட வான் பயிர்களும் அழிவடைந்து வருவதுடன், நெற்செய்கை உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என பிரதேச மக்கள்; இதன்போது சுட்டிக்காட்டனர்.

இதனைதொடர்ந்து, அங்கு சமூகமளித்திருந்த அதிகாரிகளினால் உவர்நீர் தடுப்பு தொடர்பில் ஆராயப்பட்டது. 
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்,

'வன்னியில் பல பிரதேசங்கள் உவராக மாறி வருகின்றமைக்கு மக்களின் இடப்பெயர்வும் அதனால் ஏற்பட்ட விளைவுகளான நிலங்களின் பராமரிப்பு இன்மை, தொடர்ச்சியாக சில வருடங்கள் விவசாய நடவடிக்கைகள் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த இருபது வருடங்களுக்கு பல பிரதேசங்கள் உவராக மாறியுள்ளன.

தற்போதைய நிலையில் உவர் தடுப்பு நடவடிக்கை என்பது மிகமிக அவசயமானது.

மேலும் பல பிரதேசங்கள் உவராக மாற்றமடையும் முன்னர் உவர் தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக நாம் பல வழிமுறைகளை பின்பற்றவேண்டியுள்ளது. குறிப்பாக சிறுசிறு குளங்களை உருவாக்கி நன்னீரை பல இடங்களில் சேமித்தல், கடல்நீர் தரையை நோக்கி உட்பிரவேசிக்கின்ற இடங்களில் தடுப்பு அணைகள் அமைத்தல், உவர் தன்மை கொண்ட நிலங்களில் உவர்தன்மையை குறைக்கின்ற வகையிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகள் துறைசார்ந்தவர்களால் முன்மொழியப்பட்டுள்ளன. 

எனவே இதனடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு மக்களும் தங்களுடைய பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். 

முக்கியமாக கடல்நீர் நிலத்தை நோக்கி உட்பிரவேசிப்பதனை தடுத்து நன்னீர் கடலைநோக்கி செல்வதனை தடுக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டிய தடுப்பு அணை ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா தேவை. பூநகரி பிரதேசத்தில் இவ்வாறு மூன்று அணைகள் அமைக்கவேண்டும்.

எனவே நாம் அதற்கான நிதி மூலத்தை தேடிக்கொண்டிருக்கின்றோம். விரைவில் நிதி மூலத்தை கண்டுபிடித்து அதற்கான வேலைத்திட்டங்களை முழு வீச்சில் ஆரம்பிப்போம்.

இந்த உவராதல் தடுப்பு நடவடிக்கையின் ஆரம்பமாக பூநகரி, மாலாப்பு, பொக்குடையான் குளத்தின் ஆரம்ப பணிகளுக்கு 150 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று  அவர் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .