2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொது அறிவில்லாத பொதுபலசேனா: யாழ். மாவட்ட தமிழ் பௌத்த சங்கம்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

இலங்கையில் உள்ள இனங்களிற்கிடையில் மீண்டுமொரு பேரினவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என யாழ். மாவட்ட தமிழ் பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான யாழ். மாவட்ட தமிழ் பௌத்த சங்கச் செயலாளர் சு.கிருசானந்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"எமது நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்திற்கு பின் ஜனாதிபதி எமது நாட்டில் இன, மத வேறுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றார். இந்த சமயத்தில் எமது ஐனாதிபதிக்கும் எமது நாட்டிற்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாத கருத்தை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

எமது இலங்கை நாட்டை பொறுத்தவரை பல இனத்தவர்கள் இருந்தாலும் முக்கிய இனத்தவர்களாக சிங்களவரும் தமிழரும் காணப்படுவதுடன் இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மொழி மற்றும் சகோதர மொழியையும் கலாசாரத்தையும் பண்புகளையும் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

இதிலும் மிக முக்கியமாக பௌத்தர்களும் இந்துக்களும் ஒற்றுமையாகவும் சகோதரத் தன்மையாகவும் ஒன்றுபட்டு நின்றால் எமது இந்த நாட்டுக்குள் அந்நிய நாடுகள் தலையிடவே முடியாது. பௌத்தம் என்பது ஒரு மதம் அல்ல அது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் மனிதன் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதையும் உலகிற்கு மாபெரும் கொடையாக கொடுத்த ஞானியான கௌதம புத்தரால் கொடுக்கப்பட்ட ஒரு கொடையே ஆகும்.

பௌத்தத்தின் அடிப்படை தத்துவம் என்பது தன்னை உணர்தலும் ஒழுக்கத்தை பேணுதலுமே ஆகும். ஒரு பௌத்த துறவியை தலைவராக கொண்ட பொதுபலசேனா இனவாதம் பேசுவது கண்டிக்கத்தக்கதும் வருத்தத்திற்கும் உரியதாகும்.அண்மையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பொதுபலசேனா அமைப்பின் துறவி, பொது அறிவு இல்லாமல் இலங்கையில் மட்டுமே இரண்டு அரச கரும மொழிகள் (தமிழ், சிங்களம்) இருக்கிறது.

ஏனைய நாடுகளில் இவ்வாறில்லை இல்லை என்று கூறியதை பார்க்கும் போது அவரின் பொது அறிவு என்பது எமக்கு வேதனையாக இருக்கிறது. சிங்கப்பூர், கனடா போன்ற உலகில் உள்ள சுமார் 43ற்கும் மேற்பட்ட நாடுகளில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் அரச கரும மொழியாக காணப்படுகின்றன.

ஒருவேளை இனம், மதம், சாதி எல்லாவற்றையும் துறந்தவர் தான் துறவி என்பதால் அவர் பொது அறிவுகளையே அல்லது அது சம்மந்தப்பட்ட புத்தகங்களையோ படிக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே ஒரு அமைப்பை நடத்தும் துறவிகள் இனிமேலாவது இன, மத கருத்துகளை கூறாது கௌதம புத்தர் அருளிய ('தம்ம பதம்' வசனம் 09,10,11) கூறியது போல் ஒரு துறவிக்குரிய பண்புடன் தன்னுடைய அமைப்பை நடத்தமாறு தமிழ் பொளத்த சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

பொதுபலசேனாவினால் தெரிவிக்கப்பட்ட மதமாற்ற தடைச்சட்டம், பசு வதைச்சட்டம் போன்ற கோரிக்கைகளை நாமும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதுடன் இவற்றுக்காக பொதுபலசேனாவுடன் இணைந்து போராடவும் தயாராகவும் இருக்கிறோம்.
ஆனால் எமது நாட்டு மக்களிற்கு இடையே பேரினவாதத்தையும் இனவாதம் மதவாதம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .